இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் ஏடிஎம் மையங்களில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டினால் பாதிப்படைந்துள்ள நிலையில் வங்கிகள் அதனைச் சரிசெய்யத் தீவிரமாக இறங்கியுள்ளன. எஸ்பிஐ வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட பத்திரிக்கை வெளியீட்டில் வணிகர்கள் வைத்துள்ள பிஓஎஸ் இயந்திரங்கள் மூலமாகப் பணத்தினை வித்டிராவ் செய்துகொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
எஸ்பிஐ பிஓஎஸ் இயந்திரங்கள் பயன்படுத்தும் 80 சதவீத வணிகர்களுக்கு மட்டும் இந்தச் சேவை மூலமாகப் பணத்தினை விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கி வசம் 6.08 லட்சம் பிஓஎஸ் இயந்திரங்கள் உள்ள நிலையில் 4.78 லட்சம் பிஓஎஸ் இயந்திரங்களுக்கு மட்டும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் இந்தச் சேவையினை அளிக்கும் வங்கி வாடிக்கையாளர்களுக்குப் பணம் அளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்தச் சேவையினைப் பயன்படுத்த கட்டணம் ஏதும் கிடையாது.
எவ்வளவு பணம் எடுக்க முடியும்?
Cash@POS என்ற இந்தச் செயல்பாட்டின் கீழ் வாடிக்கையாளர் ஒருவரால் ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் வரை ரொக்க பணத்தினை எடுக்க முடியும். இதுவே 5,000 முதல் 49,000 வரை மக்கள் தொகை உள்ள நகரங்களில் 2,000 ரூபாய் வரை பணத்தினை ஆர்பிஐ விதிமுறைகளுக்குட்பட்டு எடுக்க முடியும்.
பணத் தட்டுப்பாடு
எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 70,000 கோடி ரூபாய் வரை ரொக்க பணத் தட்டுப்பாடு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஏடிஎம் மையங்களில் என்ன தான் பிரச்சனை
பொதுவாக ஏடிஎம் மையங்களில் ஒரு மாதத்திற்கு 20,000 கோடி ரூபாய் வரை பணத்திற்கான தேவை இருக்கும் என்றும் ஆனால் திடீர் என்று ஏப்ரல் மாதத்தில் 13 நாட்களுக்குள் 45,000 கோடி ரூபாய் ரொக்க பணம் தேவைப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று நிதி அமைச்சகத்தினைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.
ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணிகள் துரிதம்
பணத் தட்டுப்பட்டினை குறைக்க நடவடிக்கை பல வகையில் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு நாளைக்கு 500 கோடி ரூபாய் வரை அச்சிடப்பட்டு வந்த 500 ரூபாய் நோட்டுகளை 2,500 கோடி ரூபாய் வரை அச்சடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், எனவே இந்த மாதத்தில் மட்டும் 70,000 முதல் 75,000 கோடி ரூபாய் வரை அச்சிடப்பட்டுப் பணத் தட்டுப்பாடு குறைக்கப்படும் என்றும் மூத்த அதிகாரி தெரிவித்தார்.