கடந்த 5 வருடமாக வருமான வரித் துறை வரி செலுத்துனர்களுக்கு மின்னஞ்சல் முதலாகவே தகவல் அனுப்புவதால் தபால் அனுப்பும் செலவில் 977.5 கோடி ரூபாய் வரை சேமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2013-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தச் சேமிப்பானது அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது.
நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி 2017-2018 நிதி ஆண்டில் வருமான வரித் துறை டிசம்பர் மாதம் வரையிலும் 212.27 கோடி ரூபாயினைத் தபால் செலவில் இருந்து சேமித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதுவே 2013-2014 ஆண்டில் 98.45 கோடி ரூபாயாக இருந்தது.
மின்னஞ்சல் தொடர்பு
இதே காலகட்டத்தில் வரி செலுத்துனர்களிடன் மின்னஞ்சல் மூலமாகத் தொடர்புகொள்வது அதிகரித்துள்ளது. அதாவது 2017-2018 நிதி ஆண்டில் 14.15 கோடி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 2016-2017 நிதி ஆண்டில் 11.82 கோடி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 2013-2014 நிதி ஆண்டில் 6.56 கோடி நபர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
எப்போது முதல் மின்னஞ்சல் முறை அதிகமானது?
2015-2016 மதிப்பீட்டு ஆண்டு முதல் வருமான வரித் துறை பேப்பர் இல்லா வரி தாக்கல் சேவையினை அறிமுகம் செய்ததால் மின்னஞ்சல் அனுப்பும் முறை பல மடங்கு அதிகரித்தது.
எவ்வளவு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது?
இன்றைய தேதி வரையில் வருமான வரி துறைக்கான மத்திய செயலாக்க மையம் பெங்களூருவில் இருந்து 73.73 கோடி டிஜிட்டல் கையெழுத்திடப்பட்ட மின்னஞ்சலையும், 67.96 கோடி எஸ்எம்எஸ் அலர்ட்களையும், 4.17 கோடி நபர்களுக்குத் தபால் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக நிதி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.