மத்திய நேரடி வரிகள் வாரியம் கருப்புப் பணம், முறைகேடான வழியில் சம்பாதித்த சொத்து அல்லது பினாமி சொத்துக்கள் குறித்துத் தகவல் அளித்தால் 5 கோடி ரூபாய் வரை பரிசாகப் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
2018-ம் ஆண்டுக்கான இந்தக் கருப்புப் பணம் குறித்த தகவல் அளிக்கும் பரிசு திட்டம் இந்த வாரம் முதல் அமலுக்கு வருவதாகவும், கணக்கில் வராத வெளிநாட்டுச் சொத்துக்கள் குறித்த விவரங்களை அளித்தால் கருப்புப் பணச் சட்டம் 2015-ன் கீழ் மேலும் பல மடங்கு பரிசு தொகையினைப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
எதற்காகப் புதிய திட்டம்?
மோசடியாளர்கள் முறைகேடாகச் சம்பாதித்துள்ள பணம் குறித்து இந்திய குடிமக்கள் தகவல் அளிக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பழைய விதிகள்
2007-ம் ஆண்டின் வழிகாட்டுதல்கள் படி கருப்புப் பணம் குறித்துத் தகவல் அளிப்பவர்களுக்கு வரி ஏய்ப்பு செய்ததில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் திட்டமாக இருந்தது. பின்னர் இந்தத் திட்டத்தின் கீழ் 15 லட்சம் வரை பரிசு அளிக்கும் திட்டமாகவும் மாற்றி இருந்தனர்.
புதிய திட்டம்
புதிய திட்டத்தின் படி ஒருவர் தகவல் அளித்ததன் பேரில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டால் 5 சதவீதம் முதல் படிப்படியாக 50 லட்சம் ரூபாய் வரை பரிசு பெற முடியும் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
ரூ.5 கோடி பரிசு
வெளிநாட்டுச் சொத்துக்கள் குறித்துத் தகவல் உண்மை என்றால் பரிமுதல் செய்யப்படும் தொகையில் இருந்து 3 சதவீதம் முதல் 50 லட்சம் வரை பரிசாகப் பெற முடியும். கடைசியாக 10 சதவீதம் வரித் தொகை என 5 கோடி ரூபாய் வரை பரிசு தொகை உள்ளதாகவும் வருமான வரித் துறை தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டது.
மத்திய அரசு
மத்திய அரசு இந்தப் புதிய திட்டங்களின் மூலமாகக் கருப்புப் பணம், முறைகேடான வழியில் சம்பாதித்த சொத்து அல்லது பினாமி சொத்துக்கள் குறித்து அதிகளவில் புகார் அளித்துப் பரிசுகளைப் பெறுவார்கள் என்று நம்புகிறது.
எப்படித் தகவல் அளிப்பது?
கருப்புப் பணம், முறைகேடான வழியில் சம்பாதித்த சொத்து அல்லது பினாமி சொத்துக்கள் குறித்துத் தகவல் அளிக்க விரும்புபவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் அளிக்கலாம்.