உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய டெலிகாம் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தச் சிறப்பான சூழ்நிலையில் தொலைத்தொடர்பு துறை மற்றும் அதன் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் திட்டத்துடன் இந்திய டெலிகாம் துறை மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளது.
புதிய திட்டம்..
இந்திய தொலைத்தொடர்பு துறை அறிவிக்கும் அடுத்த டெலிகாம் பாலிசியில், டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் துறையில் 2020ஆம் ஆண்டுக்குள் சுமார் 100 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது.
பலன்கள்
இதன் மூலம் இந்திய டெலிகாம் துறையில் தற்போதைய அளவை விடவும் 40 லட்ச புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டும் அல்லாமல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் டெலிகாம் துறையின் ஜிடிபி அளவை 7 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்த முடியும் என டெலிகாம் துறை தெரிவித்துள்ளது.
இது நெட் நியூட்டிராலிட்டி முறையை அமலாக்கம் செய்வதன் மூலம் எளிதாகச் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
முக்கிய நடவடிக்கை
தேசிய டிஜிட்டல் கம்யூனிகேனஷன் பாலிசி 2018இல், மத்திய அரசு ஸ்பெக்ட்ரத்தின் விலையைக் குறைக்கவும், லைசென்ஸ் கட்டணம், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் ஆகியவற்றைக் குறைக்கவும், நிறுவன இணைப்பில் இருக்கும் சட்டதிட்டங்களைத் தளர்க்கவும் இத்துறையில் ஏதுவான வர்த்தகச் சூழ்நிலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
5ஜி சேவை
இதுமட்டும் அல்லாமல் இத்திட்டத்தில் அடுத்தத் தலைமுறை சேவையான 5ஜி தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் கொண்டு வரவும், அதில் இருக்கும் வர்த்தக வாய்ப்புகளை ஆய்வு செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.