ஒவ்வொரு தொழிலதிபர்களுக்கும் தான் துவங்கிய நிறுவனம் தான் வீடு, ஊழியர்கள் தான் குடும்பம். இத்தகைய நிலையில் இந்திய ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய கோட்டையைக் கட்டியுள்ள பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர் சச்சின் பன்சால், இந்நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிளிப்கார்ட்
10 வருடத்திற்கு முன்பு பெங்களூரில் சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனமாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தைத் துவங்கிய சச்சின் பன்சால், தனது சிறந்த நிர்வாகத் திறமையால் அமேசானுடன் போட்டி போடும் அளவிற்கு இன்று பிளிப்கார்ட் உயர்ந்துள்ளது.
வால்மார்ட்
ஆனால் தொடர்ந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தவும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் அமேசானுடன் போட்டி போட சிறந்த கூட்டணி வேண்டும் என்ற நோக்குடன் தற்போது பிளிப்கார்ட், அமெரிக்காவில் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமான வால்மார்ட் உடன் கூட்டணி சேர உள்ளது.
51 சதவீத பங்குகள்
இக்கூட்டணியில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளைக் கைப்பற்ற வால்மார்ட் முடிவு செய்துள்ளது. இந்தப் பங்கு கைப்பற்றல் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிளிப்கார்ட் மூலம் தனது ஆன்லைன் வர்த்தகத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்பது வால்மார்ட் திட்டம்.
சிஇஓ
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இன்றைய ஸ்திரமான நிலைக்கு முக்கியக் காரணம் இந்நிறுவனத்தில் சிஇஓவாக நீண்ட காலம் பணியாற்றிய சச்சின் பன்சால் தான்.
வால்மார்ட்-இன் 51 சதவீத பங்கு கைப்பற்றல் திட்டத்தில் சச்சின் பன்சால் தனது பங்குகளை விற்பனை செய்ய மறுத்து உள்ளார்.
முக்கியப் பதவி
பங்கு இருப்பை விற்பனை செய்ய மறுத்துள்ளதால் பிளிப்கார்ட் -வால்மார்ட் கூட்டணி நிறுவனத்தில் முக்கியப் பதவியை அவர் எதிர்பார்க்கக் கூடும் எனச் சில வாரங்களுக்கு முன்பு பேசப்பட்டு வந்த நிலையில். தற்போது நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது.
வெளியேற்றம்...
வால்மார்ட் உடனான இணைப்பு முடிந்த பின்பு சச்சின் பன்சால் பிளிப்கார்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறுவார் எனப் பிளிப்கார்ட் நிர்வாகத்தில் இருக்கும் முக்கிய நபர்கள் 4 பேர் தெரிவித்துள்ளனர்.
இறுதி முடிவு
இந்நிலையில் சச்சின் பன்சால் வெளியேற்றம் குறித்த இறுதி முடிவை பிளிப்கார்ட் நிர்வாகம் அடுத்த ஒரு வாரத்தில் எடுக்கும் என மற்றொரு நபர் தெரிவித்துள்ளார்.
தினசரி பணிகள்
அதேபோல் மறுபுறம் பிளிப்கார்ட்-இன் இணை நிறுவனரான பின்னி பன்சால் மற்றும் பிளிப்கார்ட் சிஇஓ கல்யாண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்களது தினசரி பணிகளைச் செய்து வருகின்றனர்.
காத்திருங்கள்
பிளிப்கார்ட் இந்நிறுவனத்தில் வால்மார்ட் இணைந்த பின்பு இந்திய ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் பல மாற்றங்களைச் சந்திக்க உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஜியோ டெலிகாம் சந்தையில் இறங்கிய பின்பு கொண்டு வந்த மாற்றங்களைப் போல் தற்போது வால்மார்ட் மூலம் ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் நடக்க உள்ளது.