2017-2018 நிதி ஆண்டின் 4-ம் காலாண்டு முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட்ட தேனா வங்கி 1,225.42 கோடி ரூபாய் வாரா கடன் உள்ளதாகத் தெரிவித்து இருந்தது.
இதனை அடுத்து இந்திய ரிசர்வ் வங்கியான ஆர்பிஐ உடனடியாக வாரா கடன் வைத்துள்ள கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனா வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.
நட்டம்
பொதுத் துறை வங்கி நிறுவனமான தேனா வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 575.26 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளது. இதுவே டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3-ம் காலாண்டில் 380.07 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடிதம்
அதுமட்டும் இல்லாமல் தேனா வங்கிக்கு ஆர்பிஐ மே 7-ம் தேதி அனுப்பிய ஒரு கடிதத்தில் புதிய கடன் வெளிப்பாடு மற்றும் ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதிலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து மே 11-ம் தேதி தேனா வங்கிகள் நிர்வாகிகள் இடையிலான கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது.
சொத்து மதிப்பு
வாரா கடன் உடன் ஒப்பிடும் போது தேனா வங்கியின் சொத்து மதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. 12,618.73 கோடியாக இருந்த வாரா கடன் 16,361.44 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர வாரா கடன் மதிப்பு 10.66 சதவீதத்தில் இருந்து 11.95 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கனரா வங்கி
4 வங்கிகளில் அதிக நட்டம் அடைந்துள்ள பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கனரா வங்கி மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 4-ம் காலாண்டில் 4,860 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதே காலாண்டில் சென்ற ஆண்டு 214 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்றுள்ளதாகக் கனரா வங்கி அறிவித்து இருந்தது.
கனரா வங்கியின் வரா கடன் சதவீதம் 3ம் காலாண்டு இருந்த 10.38 சதவீதம் மற்றும் சென்ற ஆண்டு 4-ம் காலாண்டில் இருந்த 9.63 சதவீதத்தினை விட அதிகமாக உயர்ந்து 2017-2018 நிதி ஆண்டின் கடைசிக் காலாண்டில் 11.84 சதவீதமாக உள்ளது. வரா கடன் மதிப்பு சென்ற ஆண்டு இருந்ததை விட மூன்று மடங்கு உயர்ந்து 8,763 கோடி ரூபாயாக உள்ளது.
அலகாபாத், யூகோ & தேனா வங்கி
அலகாபாத் வங்கி 3,510 கோடி ரூபாயும், யூகோ வங்கி 2,134 கோடி ரூபாயும் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா
பொதுத் துறை வங்கி நிறுவனமான யூனியன் பாங்க் ஆப் இந்தியா வியாழக்கிழமை 4ம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்ட போது 2,583 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.