தென் இந்தியாவின் மிகப்பெரிய டிவி சேனல் நிறுவனமான சன் நெட்வொர்க் பங்குகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 11.7 சதவீதம் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
செப்டம்பர் 2017க்குப் பின் சன் டிவி பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் தான் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் சிறப்பான வளர்ச்சி தான்.
மார்ச் காலாண்டில்
சன் டிவிக்குப் போட்டியாகத் தென் இந்தியாவில் பல டிவி சேனல்கள் வந்தாலும் இதன் ரசிகர்கள் இந்நிறுவனத்தைக் கைவிடவில்லை. இதன் காரணமாகவே மார்ச் காலாண்டில் சன் நெட்வொர்க் லாபத்தில் 23 சதவீத வளர்ச்சி அடைந்து 289.76 கோடி ரூபாயை என்ற அளவை அடைந்துள்ளது.
அதேபோல் விளம்பர வருவாயில் 26 சதவீத வளர்ச்சியும், சந்தா வருவாயில் 28 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது.
பங்குகள்
இன்று காலை வர்த்தகத்தில் சன் டிவி நிறுவனப் பங்குகள் 11.7 சதவீதம் வரையில் உயர்ந்து 969.90 ரூபாய் வரையில் உயர்ந்தது.
இதனால் இந்நிறுவனப் பங்குகள் மீது முதலீட்டு அளவுகள் அதிகரித்துள்ளது.
தரம் உயர்வு..
மேலும் சன் டிவி பங்குகளை வாங்கலாம் என அதன் முதலீட்டுத் தரத்தை உயர்த்தியுள்ளது நோமுரா, இதன் மூலம் சன் டிவி டார்கெட் விலை 1,105 ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாடு
மேலும் தமிழ்நாட்டில் டிஜிட்டல் சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், சராசரியாக ஒரு வாடிக்கையாளருக்கு 10-15 ரூபாய் அளவிலான வருமானம் பெற முடியும் என நோமுரா ஆய்வுகள் கூறுகிறது.
சரிவு
சன் டிவியின் சக போட்டி நிறுவனமான ஜீ எண்டர்டெயின்மென்ட் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 12.3 சதவீதம் வரையில் சரிந்த நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் கணிசமான உயர்வைச் சந்தித்து மீண்டும் சரிந்தது.
அதேபோல் ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 15.6 சதவீதம் வரையில் சரிந்தது, ஆனால் இன்று காலை வர்த்தகத்தில் அதிகப்படியாக 4 சதவீதம் வரையில் உயர்ந்து 11 மணி அளவில் 2.65 சதவீத உயர்வில் வர்த்தகமாகி வருகிறது.