இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையினால் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாகவே ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 4 மாத உயர்வை அடைந்துள்ளது.
மார்ச் மாதம் 2.47 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 3.85 சதவீதமாக உயர்ந்துள்ளது. டிம்பர் 2017இல் இருந்து தொடர்ந்து குறைந்து வந்த மொத்த விலை பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் உயரத் துவங்கியுள்ளது. இந்த நிலைக்கு முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான்.
மத்திய அரசு இன்று வெளியிட்ட பணவீக்க தரவுகளின் படி மார்ச் மாதத்தில் -0.29 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 0.87 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் காய்கறி விலை பணவீக்கம் -0.89 சதவீதத்தில் இருந்து 2.70 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதேபோல் பழங்கள் மீதான பணவீக்கம் 9.26 சதவீதத்தில் இருந்து 19.47 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் பெட்ரோல் பணவீக்கம் 2.55 சதவீதத்தில் இருந்து 9.45 சதவீதமாக உயர்ந்துள்ளது, அதேபோல் டீசல் பணவீக்கம் 6.12 சதவீதத்தில் இருந்து ஏப்ரல் மாதத்தில் இருந்து 13.01 சதவீதமாக உயர்ந்துள்ளது.