இன்று பட்டப்படிபை படித்து, பெரு நகரங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை இயற்கையோடும் வாழவும், இதைச் சார்ந்துள்ள துறையில் தொழில் செய்ய ஆர்வமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக விவசாயம் செய்யவும், அதனை முறைப்படி கற்றுக்கொள்ளவும் மக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
மறுபுறம் விவசாயத்தில் இருக்கும் குடும்பங்கள் தற்போது நகரங்களுக்கும், டவுன் பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து மனவேதனையுடன் வெவ்வேறு தொழிலும், பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி ஒருபிரிவினர் விவசாயத்தின் மீது ஆர்வமாகவும், மற்றொரு பிரிவினர் விவசாயத்தை விட்டு வெளியேறும் மக்களுக்கும் சேர்த்து ஊக்குவிக்கும் ஒரு கதையாக அமைகிறது இந்தக் குஜராத் விவசாயி செயல்.
கிதாஜி சோலான்கி
குஜராத் மாநிலத்தின் சந்தாஜி கோலியா என்னும் சிறிய கிரமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் கிதாஜி சோலான்கி. இவர் தந்தை உருளைக் கிழங்கு, நிலக்கடலை போன்றவற்றை விளைவித்து வந்த நிலையில் இவர்களுக்குச் சிறப்பான வருமானம் கிடைத்தது. ஆனால் நாட்கள் நகர விவசாயம் பாதித்து வருமானம் குறைந்தது, இதனால் கிதாஜி 7ஆம் வகுப்பிலேயே தனது படிப்பை முடித்துக்கொண்டார்.
தந்தையுடன் உதவி
அதன் பின்பு தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்யவும் அப்பொருட்களை விற்பனை செய்வதிலும் அனுபவம் பெற்றார் கிதாஜி சோலான்கி. இக்காலகட்டத்தில் ஏற்றுமதி செய்வது எப்படி, அதற்கான உரிமத்தைப் பெறுவது எப்படி, அதனைச் சந்தைப்படுத்துவது எப்படி எனப் பலவற்றைக் கற்றார்.
4 ஏக்கர் நிலம்
1994ஆம் ஆண்டில் கிதாஜி சோலான்கி முத்த சகோதரர் கிராமத்திற்கு வெளியில் 4 ஏக்கர் நிலத்தை வாங்கினார், 2014 வரையில் இந்த நிலத்தில் தந்தையைப் போலவே விவசாயம் செய்தார்.
இக்காலகட்டத்திலும் தான் விளைவித்த உருளைக்கிழங்குகளை ஏற்றுமதியாளர்களுக்கு விற்பனை செய்து வந்தார்.
புதிய ஐடியா..
இக்காலகட்டத்தில் தான் உருளைக்கிழங்கு மட்டும் நம்பி வருடம் முழுவதும் வர்த்தகம் செய்ய முடியாது, புதிதாக முயற்சி செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு முலாம் பழத்தை முயற்சி செய்யலாம் என IIFCO அமைப்பு மூலம் தெரிந்துகொண்டார்.
டெக் உதவிகள்
புதிதாக முயற்சி செய்ய வேண்டும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என எப்போதுமே ஆர்வமாக இருக்கும் 41 வயது கிதாஜி சோலான்கி மொபைல் போன்களில் விவசாயம் குறித்த செயலிகளைப் பயன்படுத்துவது எப்படி எனக் கற்றுக்கொண்டார். இதன் பின்பு சோலார் பம்பு, சொட்டு நீர் பாசனம், வேர்ப்பாதுகாப்பிற்கான வழிகளைக் கண்டறிந்தார்.
இதன் மூலம் 2017ஆம் ஆண்டில் முடிவில் 4 ஏக்கர் நிலமும் முழுமையான விவசாயத்திற்குத் தயாரானது.
முலாம் பழம்
பிப்ரவரி 12, 2018இல் தனது 4 ஏக்கர் நிலத்தில் முலாம் பழம் விதைகளை விதைத்தார்.
70 நாட்கள்
தன் ஊரில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் ஆச்சரியம் படும் அளவிற்கு 4 ஏக்கர் நிலத்தில் 70 நாட்களில் சுமார் 140 டன் முலாம்பழத்தை அறுவடை செய்தார் கிதாஜி சோலான்கி.
இதனை ஒரு டீலர் மூலம் கஷ்மீருக்கு சுமார் 21 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் கிதாஜி.
முதலீடும், லாபமும்..
140 டன் அளவிற்கு முலாம்பழத்தை உற்பத்தி செய்ய அவர் சுமார் 1.6 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். ஆனால் அவருக்குக் கிடைத்த லாபமோ 19.5 லட்சம்.
கோடைக் காலம் என்பதால் இவருக்கு அதிக லாபம் கிடைத்துள்ளது. ஆனால் வருடம் முழுவதும் இதைச் செய்ய முடியாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். விவசாயம் செய்யவும், மாற்றுத் திட்டத்தை யோசித்துக்கொண்டு இருக்கும் விவசாயிகளுக்கு இது ஊக்குவிப்பு அளிப்பதாக இருக்கும் நம்புகிறோம்.
கருத்து..
இதேபோல் முலாம்பழம் விளைவிப்பத்தில் இருக்கும் சவால்கள், சாதகப் பாதகங்களை விவசாயிகள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் கருத்து பதிவிடும் இடத்தில் பகிர்ந்தால் மிக்க மிகழ்ச்சி அடைவோம். உங்கள் கருத்து பலருக்குப் பயன்படும்.
புகைப்படம்: பெட்டர்இந்தியா
எம்ஜி முத்து