கர்நாடக தேர்தல் முடிவு இறுதியில் பாஜக 104 தொகுதியுடன் வெற்றிபெற்றாலும் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி சேர்ந்த உடன் எடியூரப்பாவின் முதலமைச்சர் கனவு காணாமல் போய்விடும் என்று எதிர்பார்த்த நிலையில் உச்ச நீதிமன்றம் பதவி ஏற்கத் தடையில்லை என்பதால் ஆளுநர் ஆதரவுடன் வியாழக்கிழமை கர்நாடகாவின் முதல்வராகப் பதவி ஏற்றார்.
ஆனால் அடுத்த நாளே உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை மாலை 4 மணிக்குத் தனது எம்எல்ஏ-க்களின் ஆதரவை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
100 கோடி
பாஜக எப்படியாவது காங்கிரஸ், ஜேடிஎஸ் மற்றும் சுயேட்ச்சை எம்எல்ஏ-க்களை 100 கோடி ரூபாய் மற்றும் அமைச்சர் பதவிகளை அளித்து வாங்கிப் பெருபான்மையினை நிர்வகிக்கலாம் என்று திட்டமிட்ட நிலையில் குமாரசாமி கூட்டணி புதன் கிழமை காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்எல்ஏ-க்களை மைசூர் சாலையில் உள்ள ஈகல்டன் ரிசார்ட்டுக்கு கடத்திச் சென்றனர்.
முதல்வர் ஆன எடியூரப்பா
முதல்வர் பதவியை எடியூரப்பா ஏற்றவுடன் பாஜக காங்கிரஸ் மற்றும் எம்எல்ஏ-க்களைத் தங்கள் வசம் இழுக்க என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதால் தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்திற்கு எம்எல்ஏ-க்களைக் கொண்டு சென்றுள்ளனர்.
ஈகல்டன் ரிசார்ட்
இரண்டு நாட்கள் ஈகல்டன் ரெசார்ட்டில் எம்எல்ஏ-க்களைத் தங்கவைக்க லட்சம் கணக்கில் செலவு செய்த குமாரசாமி கூட்டணி கட்சிகள் தற்போது அடுத்தக் கட்ட நடவடிக்கையாக இரவோடு இரவாக எம்எல்ஏ-க்களை ஆந்திராவிற்குக் கடத்தி சென்றுள்ளனர்.
இதற்காக ஷர்மா, ஆரஞ்ச் மற்றும் எஸ்ஆர்எஸ் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இந்தப் பேருந்து நிறுவனங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.
ஷர்மா டிரான்ஸ்போர்ட்ஸ்
ஷர்மா டிரான்ஸ்போர்ட்ஸ் பேருந்தில் பெங்களூரு டூ ஹைதராபாத் செல்ல 1,200 கட்டணமாகும். இந்த ஷர்மாஸ் டிரான்ஸ்போர்ட்ஸ் இணை நிறுவனர் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளி என்று கூறப்படுகிறது.
ஆரஞ்ச் டிராவல்ஸ்
ஆரஞ்ச் டிராவல்ஸ் தெலுங்கான முதல்வரான கே சந்திரசேகர ராவ்க்கு நெறுங்கிய சுனில் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனமாகும்.
கே சந்திரசேகர ராவ்
தெலுங்கானா முதல்வரான கே சந்திரசேகர ராவ் குமாரசாமிக்கு மிகவும் நெறுக்கமானவர் ஆவார். தேர்தலின் போது கூட ஹைதராபாத் கர்நாடகாவில் அதிகம் உள்ள தெலுங்க மக்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று குமாரசாமிக்கு ஆதரவும் அளித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் தெலுங்கானாவிற்கு வந்துள்ள குமாரசாமி எம்எல்ஏ கூட்டணி எம்எஎல்ஏ-க்களுக்கு 500-க்கும் மேற்பட்ட காவலர்களைப் பணிக்கு அனுப்பியுள்ளார்.
பார்க் ஹயாத் ஹோட்டல் ஹைதராபாத்
முன்பெல்லாம் கர்நாடகாவில் ரிசார்ட் அரசியல் என்றால் தமிழகத்திற்கு வருவது தான் வழக்கம். ஆனால் தமிழகத்தில் உள்ள எடப்பாடி அரசு பாஜகவிற்கு அதராவாகச் செயல்படுவதால் தெலுங்கானாவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பார்க் ஹயாத் ஹோட்டலின் ஹைதராபாத்தின் தலைவர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான டி சுப்ரமணி ரெட்டி ஆவார்.
கட்டணம் எவ்வளவு
பார்க் ஹயாது ஹோட்டலில் 185 அறைகள் மற்றும் 24 சூட்கள் உள்ளன. அதிகபட்சம் கட்டணங்கள் 14,276 ரூபாய் ஒரு இரவு அறை கட்டணமாக இங்கு வசூலிக்கப்படுகிறது.
டாஜ் கிருஷ்ணா ஹைதராபாத்
திடீர் என்று குமாரசாமி கூட்டணி எம்எல்ஏ-க்கள் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டதால் இடம் பற்றாக்குறை ஏற்பட டாஜ் கிருஷ்ணா ஹைதராபாத்-ல் சில எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
டாஜ் கிருஷ்ணாவில் 10,880 ரூபாய் ஒரு நாள் கட்டணம் என ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணம்
பயணத்தின் போது தனியார் பாதுகாவலர்கள், ஜிம் பாய்ஸ் எல்லாம் கூடவே பாதுகாப்பிற்காகப் பாஜகவினர் வந்தால் தடுக்கக் கூடவே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எவ்வளவு செலவு என்று தெரியவில்லை. அதே நேரம், நேற்று இரவு தெலுங்கானா கொண்டு செல்லப்பட்டுள்ள எம்எல்ஏ-க்கள் மீண்டும் நாளை 4 மணிக்குள் பெங்களூரு விதான் சவுதாவிற்கு அதாரவு வாக்களிக்க அழைத்து வரப்படுவார்கள் அதுவரை எவ்வளவு செலவு செய்ய இருக்கிறார்கள் என்று கணக்கிட்டால் கண்ணைக் கட்டுகிறது.
தேர்தல்
தேர்தலின் போதே அரசியல் கட்சிகள் பெரும் அளவில் பணத்தினைச் செலவு செய்துள்ள நிலையில் தற்போது தங்களது எம்எல்ஏ-க்களைப் பாதுகாக்க ஒரு பக்கம் லட்சங்களில் செலவு செய்து வருகின்றன.