பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் உரிமை கச்சா எண்ணெய் நிறுவனங்கள் கையில் இருக்கிறது, மத்திய அரசுக்கும் இதற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று பலர் கூறும் நிலையில் தனது விருப்பம் போல் விலையை உயர்த்தி வரும் எண்ணெய் நிறுவனங்கள் எதிர்த்துக் கேள்வி கூடக் கேட்க முடியாத நிலையில் தான் மத்திய அரசு உள்ளது என்பதைத் தற்போது சூழ்நிலை காட்டுகிறது.
கர்நாடக தேர்தல்
கர்நாடக தேர்தலுக்காகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும் கிட்டத்தட்ட 20 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் மத்திய அரசுக்குச் சாதகமாக எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டது. ஆனால் இதைப் பல தரப்புகள் எதிர்த்தது.
திங்கட்கிழமை உயர்வு
கணித்ததைப் போலவே கர்நாடக தேர்தல் முடிந்த பின் திங்கட்கிழமையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தத் துவங்கியது இந்தியன் ஆயில் நிறுவனம்.
வாரத்திற்கு 1 ரூபாய்
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.03 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 1.24 ரூபாய் உயர்ந்து சமானிய மக்களை வாட்டி வதைக்கிறது.
கச்சா எண்ணெய்
இதேகாலக்கட்டத்தில் ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதன் விளைவாக இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 4 டாலர் உயர்ந்து 80 டாலரை என்னும் உச்ச விலையை அடைந்துள்ளது.
இந்திய சந்தை
80 டாலர் விலை தாக்கம் இன்னும் இந்திய சந்தையில் வரவில்லை, அடுத்த வாரம் முதல் இதன் எதிரொலி பயங்கரமாக இருக்கும். கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 79.50 முதல் 80 டாலர் அளவிலேயே இருந்தால் கண்டிப்பாக அடுத்த ஒரு வார வர்த்தகத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரையில் உயர்வை எதிர்பார்க்கலாம்.
மத்திய அரசு
பிரதமர் மோடி முதல் அனைத்து முக்கியத் தலைவர்களும் தற்போது கர்நாடக ஆட்சி மீது குறியாக இருப்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறித்து ஆய்வு செய்ய முடியவில்லை எனத் தெரிகிறது.
மேலும் தற்போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நல குறைபாட்டால் ஓய்வில் இருக்கும் நிலையில் தற்காலிகமாகப் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரிக் குறைப்பு
கச்சா எண்ணெய் விலை உயர்வு மத்திய அரசின் கையில் இல்லையென்றாலும் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரியைக் குறைக்க முடியும். இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.
ஆனால் இதைச் செய்யாமல் எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் மக்களை வாட்டி வதைக்கிறது
கணிப்பும்.. எதிர்ப்பும்..
தற்போதைய கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை வைத்துப் பார்க்கும் போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும் நிலையில் மத்திய அரசு இதன் மீதான வரியைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் விலை உயர்வின் அளவு 2 ரூபாயாக இருக்கும்.