2018-ம் ஆண்டிற்கான ஊழல் குறித்து 13 மாநிலங்களை ஆய்வு செய்த சிஎம்எஸ் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மோடி ஆட்சியின் போது தான் ஊழல் பெருகிவிட்டது என்று கூற முடியவில்லை என்றாலும் பிரதமர் அதனைக் கண்டுகொள்ளவே இல்லை என்று தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.
சிஎம்எஸ் இந்தியா நடத்திய ஆய்வில் தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ் நாடு, பீகார், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில ஊழல்கள் ஆராயப்பட்டுள்ளது.
பொதுச் சேவைகள்
பொது விநியோக முறை, மின்சாரம், மருத்துவம்/மருத்துவமனை, பள்ளி, கல்வி, நீர், கிராமப்புற திட்டங்கள், வங்கி சேவைகள், காவல் துறை, நீதி துறை, நிலம்/ வீடு பத்திரங்கள் மற்றும் போக்குவரத்துத் துறையில் ஊழல் குறித்து ஆய்வுகளைச் செய்துள்ளனர்.
2005 டூ 2018 ஊழல் எப்படி உள்ளது?
மேலே கூறிய 10 பொதுச் சேவைகளில் 2005-ம் ஆண்டு 52 சதவீதமாக இருந்த ஊழல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
முதல் இடத்தில் தமிழ் நாடு
சிஎம்எஸ் இந்தியா நிறுவனம் நடத்திய 12வது சுற்று ஆய்வு இதுவாகும். இந்த ஊழல் பட்டியலில் தமிழ் நாடு முதல் இடத்தினைப் பிடித்துள்ளது. தமிழகம் தான் ஊழலுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மாநிலம் என்று கூறப்படுகிறது.
தெலுங்கானா
பொதுத் துறை சேவைகளில் ஊழல் புரிவதை கண்டுகொள்ளாத மாநிலமாக இரண்டாம் இடத்தினைத் தெலுங்கானா பிடித்துள்ளது என்று சிஎம்எஸ் இந்தியா ஊழல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 4-ம் இடத்தினை ஆந்திரா பிடித்துள்ளது.
மத்திய அரசு
விஜய் மல்லையா, நீரவ் மோடி என ஊழல் பெருகிக்கொண்டே போகும் நிலையில் மத்திய அரசு இதனைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
ஊழல் எதிராக நடவடிக்கை எடுக்கும் மாநிலங்கள்
பீகார், டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஊழல் எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையால் குறைந்து காணப்படுவதாகவும் அதே நேரம் ஆந்திர பிரதேசம் & தமிழ் நாட்டில் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை என்கின்றனர்.
லஞ்சமாகப் பெறப்பட்டுள்ள தொகை
13 மாநிலங்களில் 11 பொதுத் துறை சேவை துறைகளில் ஒரு ஆண்டில் 2,500 முதல் 2,800 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்று இருக்கலாம் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஊழல் எதிராக மக்கள் போராடுவது
தெலுங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், பீகார் மாநில மக்கள் ஊழல் எதிராக அதிகளவில் இருப்பதாகவும், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் ஆகிய மாநில மக்கள் இதனைக் கண்டுகொள்வதில்லை என்றும் தெரியவந்துள்ளது.
முழு அறிக்கை
சிஎம்எஸ் இந்தியா ஊழல் குறித்து வெளியிட்ட முழு அறிக்கையினை இங்குக் காணலாம்.