ஜப்பானின் சாப்ட்பாங்க் வசம் இருந்த பிளிப்கார்ட்டின் 21 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தற்போது அதனை முழுமையாக விற்க முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
சென்ற வாரம் முதலே சாப்ட் பாங்க் தங்கள் வசம் உள்ள பிளிப்கார்ட் பங்குகளை விற்று விட்டுப் பிற ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அது தற்போது உறுதியாகியுள்ளது.
மதிப்பு எவ்வளவு?
ஜப்பான் நிறுவனமான சாப்ட்பாங்க் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 16,750 கோடி ரூபாய் முதலீடு செய்து இருந்தது. தற்போது இந்த விற்பனையின் மூலம் 26,800 கோடி ரூபாயினைச் சாப்ட்பாங்க் பெற இருக்கின்றது.
முதலீடு
சென்ற வாரம் அடுத்து வரும் 10 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களில் 10 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய இருப்பதாகச் சாப்ட்பாங்க் தலைமை நிர்வாக அதிகாரியான மசயோசி சன் தெரிவித்து இருந்தார். அப்போதே இவர் பிளிப்கார்ட் பங்குகளை விற்க உள்ளார் என்று செய்திகள் வந்தன.
சாப்ட்பாங்க்
இரண்டு வாரங்களுக்கு முன்பு பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் 16 பில்லியன் டாலர் அளித்து வாங்கிய நிலையில் 21 சதவீத பிளிப்கார்ட் பங்குகளை வைத்து இருந்த சாப்ட்பாங்க் அதனை விற்பது குறித்து முடிவு செய்யாமல் இருந்தது.
வால்மார்ட் பங்குகள் சரிவு
பிளிப்கார்ட் நிறுவனத்தினை வாங்கிய அடுத்த நாளே வால்மார்ட் பங்குகள் சரிந்த நிலையில் சாப்ட்பாங்க் வசம் உள்ள பிளிப்கார்ட்டின் பங்குகள் தான் இதற்காகக் காரணங்கள் என்று கூறப்பட்டது.
ஸ்னாப்டீல்
சாப்ட்பாங்க் நிறுவனம் அடுத்தகட்டமான மீண்டும் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் முதலீடுகளை அதிகரிக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் ஆனால் எவ்வளவு என்று மட்டும் முடிவு செய்யவில்லை என்று மசயோசி சன் தெரிவித்துள்ளார்.