இந்திய டெலிகாம் சந்தியில் இலவசங்கள் மற்றும் குறைந்த விலையில் தரவுகள் போன்றவற்றை அளித்து மிகப் பெரிய தரவு புரட்சியைச் செய்த ரிலையன்ஸ் ஜியோ அடுத்தகட்டமாகச் சர்வதேச சந்தைக்குச் செல்ல உள்ளது.
அதன் முற்கட்டமாகச் சிறிய ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவை தேர்வு செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் எஸ்டோனியா ஆன்லைன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஏற்ற ஒரு நாடாக உள்ளது. இங்குத் தங்களது துணை நிறுவனமான ஜியோ கீழ் வர்த்தகத்தினைச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி
எஸ்டோனியாவின் இ-ரெசிடன்ஸி திட்டத்தில் இணைந்து செயல்பட முகேஷ் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இதற்காக அந்த நாட்டு அரசு அதிகாரிகளுடன் அம்பானி கலந்துரையாடியதாகவும் இந்த இ-ரெசிடன்ட்ஸ் திட்டத்தின் கீழ் எஸ்டோனியா அரசு அளிக்கும் வணிக அனுமதியுடன் சர்வதேச சந்தையில் ரிலையன்ஸ் கால்பதிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தை
ஐரோப்பிய நாடுகளில் கால்பதிக்க ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எஸ்டோனியா முதற்படியாக இருக்கும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் & ஹோல்டின்ஸ் லிமிடட் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் எஸ்டோனியாவில் முதலீடு செய்ய 1.5 மில்லியன் யூரோ அதாவது 12.20 கோடி ரூபாயினைக் கடனாக ரிலையன்ஸ் ஜியோவிற்கு அளிக்கும்.
ஜியோ
ஜியோ நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் தனது வணிகத்தினைப் பெருக்குவதன் மூலம் இந்திய டெலிகாம் துறையில் உள்ள போட்டிகளால் ஏற்படும் சரிவை ஈடுகட்ட முடியும் என்று அம்பானி திட்டமிட்டுள்ளார்.
ஃபோர்ப்ஸ்
2016-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலின் படி எஸ்டோனியாவின் ஜிடிபி-ஐ விட அம்பானியின் நிறுவனத்தின் மதிப்பு அதிகமாகும். இதனைப் பார்க்கும் போது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இது ஒரு மிகச் சிறிய நாடாகும்.
எஸ்டோனியா
எஸ்டோனியா அரசு தனித்துவமான டிஜிட்டல் ஆளுமை அமைப்பை உறுவக்கியுள்ளது. எஸ்டோனியாவின் 99 சதவீத அரசு சேவைகள் ஆன்லைன் மூலம் 24 மணி நேரமும் கிடைக்கிறது. இ-ரெசிடண்ட்ஸ் சேவை மூலமாக ஆன்லைனில் ஒரே நாளில் ஒரு நிறுவனத்தினைத் துவங்க முடியும்.
மேக் இன் இந்தியா & சேல் இன் ஐரோப்பா
இ-ரெசிடன்சி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனங்களைத் தங்களது ஸ்டர்ட்அப்-ஐ துவங்க எஸ்டோனியா வரவேற்று வருகிறது. எஸ்டோனியா அரசு இ-ரெசிடன்சி திட்டம் கீழ் மேக் இன் இந்தியா & சேல் இன் ஐரோப்பாவிற்கு அனுமதி அளிக்கிறது.
இ-ரெசிடன்ஸி
மேலும் இ-ரெசிடன்ஸி இணையதளத்தின் கீழ் உலகின் எந்த மூலையிருந்து வேண்டுமானாலும் தொழில் துவங்கி நிறுவனத்தின் கணக்குகளை அவர்கள் நாட்டில் இருந்தே இருந்து நிர்வகித்து, டிஜிட்டல் கையொப்பங்கள், வரி தாக்கல், பணம் பரிமாற்றம் போன்றவற்றையும் செய்ய முடியும்.
இ-ரெசிடன்சி திட்டத்தினை 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எஸ்டோனியா அரசு அறிமுகம் செய்த நிலையில் தற்போது வரை 154 நாடுகளில் இருந்து 30,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. உலகளவில் மிக எளிமையாகப் பிஸ்னஸ் துவங்கக் கூடிய நாடாக எஸ்டோனியா டிஜிட்டல் சேவையினை வழங்கி வருகிறது.
டெலிகாம் சேவை
ஜியோ நிறுவனம் எஸ்டோனியாவில் எளிதாகத் தங்களது டெலிகாம் சேவையினை அளித்து ஐரோப்பிய டெலிகாம் துறையில் வெற்றிபெறும் போது இந்தியாவில் உள்ள விலை போரினால் ஏற்படும் இழப்பில் இருந்து பிழைக்கும் என்பதில் சந்தேகமில்லை.