பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 4 வருடத்தினை நிறைவு செய்துள்ள நிலையில் கடந்த 4 வருடத்தில் ஜன் தன் யோஜனா முதல் ஜிஎஸ்டி வரை என்னவெல்லாம் சாதனை எல்லாம் செய்துள்ளது என நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் உள்ள விவரங்களையும், தற்போதைய சூழல் குறித்தும் விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
பணமதிப்பு நீக்கம்
பிரதமர் மோடி தலைமையிலான 4 வருட ஆட்சியில் மிகவும் விமர்சனத்திற்குள்ளான மக்கள் அவதிப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு சாதனை எனத் தெரிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு திடீர் என்று நாளை முதல் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த உடன் மக்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டார்கள் அதன் தாக்கம் இந்தியாவின் ஜிடிபி வரை இருந்ததும், தற்போது வரை பணத்தட்டுப்பாட்டால் ஏற்பட்டு வரும் சிக்கல் என்ன என்று தெரியவில்லை.
கருப்புப் பணம்
பண மதிப்பினை நீக்கிய பிறகு கருப்புப் பணம் குறையும், ஊழல் குறையும், கள்ள ரூபாய் நோட்டுகள் குறையும், தீவிரவாதிகளுக்குப் பணம் செல்வது தடுக்கப்படும், பண மோசடிகள் குறையும் என்று அறிவித்தனர். ஆனால் அதன் பிறகு தீவிரவாத நடவடிக்கை ஒன்றை தவிரப் பிற அனைத்தும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
ஜிடிபி
இந்திய பொருளாதாரத்தினை நீண்ட கால வளர்ச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் ஜிடிபி குறித்துப் பாஜக அரசு தற்போது பயன்படுத்தி வரும் சூத்திரம் தவறானது என்றும், முறையான சூத்திரத்தினைப் பயன்படுத்தினால் இந்தியாவின் ஜிடிபி சரிந்து இருக்கும் என்று விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள்
கருப்புப் பணத்திற்கு எதிராக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது இருந்ததை விட அதிகளவில் தற்போது ரொக்க பணப் பரிமாற்றம் அதிகரித்துள்ளது என்றும் தரவுகள் கூறுகின்றன.
ஜன் தன் யோஜனா
முறை சாரா துறையில் பணிபுரிந்து வருபவர்களுக்கும் வங்கி சேமிப்பு கணக்கு வேண்டும், இதன் மூலம் கருப்புப் பணம் நடமாட்டத்தினைக் குறைக்க முடியும் என்று ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஜன் தன் யோஜனா சேமிப்பு கணக்குகளை நிர்வகிக்கக் கூடுதல் செலவாகின்றது. எனவே சாதாரணச் சேமிப்புக் கணக்குகள் வைத்துள்ளவர்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கோடி கணக்கில் மக்கள் பணத்தினை வங்கிகள் பிடித்தம் செய்தன.
வருமான வரி தாக்கல்
2015-2016 நிதி ஆண்டில் இருந்ததை விட 29.17 சதவீதம் கூடுதலாக 2016-2017 நிதி ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தனர். 2016-2017 நிதி ஆண்டினை விட 2017-2018 நிதி ஆண்டில் 25.1 சதவீதத்தினரை கூடுதலாக வருமான வரி தாக்கல் செய்ய வைத்தது சாதனை தான்.
ஜிஎஸ்டி
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஜிஎஸ்டி குறித்துப் பேசும் போது எல்லாம் அதனை எதிர்த்த பாஜக 2017-ம் ஆண்டு அதனை அமலுக்குக் கொண்டு வந்தது. ஆனால் ஒரு வருடங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி-ல் பல சீரமைப்புகள் செய்ய வேண்டி உள்ளது. சிறு வணிகர்கள் இதனால் பலவகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி தக்கல் செய்யக் கூடிய இணையதளம் வேகம் இல்லாமல் திணறி வருகின்றது.
பினாமி பரிவர்த்தனைகள்
பினாமி பரிவர்த்தனைகள் குறித்துத் தகவல் அளிப்பவர்களை ஊக்குவிக்க இந்த ஆயிரம், லட்சம், கோடிகள் எனப் பரிசுகளை அறிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு நபர்கள் புகார் அளித்துப் பரிசுகள் பெற்றுள்ளார்கள் என்று தெரியாத ரகசியம்.
நிறுவன திவால் சட்டம்
திவால் ஆகும் நிலையில் உள்ள நிறுவனங்களை அதில் இருந்து மீட்க உதவுவது அல்லது பிற நிறுவனங்களுக்கு அதனை விற்று ஊழியர்களைக் காப்பாற்றுவது மற்றும் வங்கிகளில் உள்ள கடன் தொகையினைச் செலுத்த உதவுவதற்காக நிறுவன திவால் சட்டமான ஐபிசி மெருகேற்றப்பட்டது.
ஆதார்
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆதார் திட்டத்தினை எதிர்த்த பாஜக தற்போது அதனைப் பல அரசு திட்டங்களுக்குக் கட்டாயம் என்று கூறி வந்தது. ஆனால் அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடுகளால் ஆதார் இணைப்பினை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. ஆனாலும் பல அரசு திட்டங்களுக்கும் ஆதார் இன்று வரை கட்டாயமாக உள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
அனைவருக்கு வீடு திட்டம் என்ற பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் நாடு முழுவதும் பெரும் அளவில் வரவேற்பினை பெற்ற திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கிழ் பல குடிசை வீடுகள் சிமெண்ட் வீடுகளாக மாறியுள்ளன என்பதை மறுக்க முடியாது.