சென்னை: முன்னாள் மத்திய நிதி அமைச்சரான ப சிதம்பரம் புதன் கிழமை மத்திய அரசால் பெட்ரோல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் வரை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இது டிவிட் போட்ட ப சிதம்பரம் எப்படி ரீடெயில் பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படுகிறது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
25 ரூபாய் போனான்ஸா
கச்சா எண்ணெய் விலை குறையும் போது மத்திய அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 15 ரூபாய் வரை மிச்சம் ஆகும். அது மட்டும் இல்லாமல் மத்திய அரசு கூடுதலாக 10 ரூபாய் வரியினை ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்வதன் மூலம் பெறுகிறது என்றும் இதன் மூலம் மத்திய அரசுக்கு 25 ரூபாய் போனான்ஸா என்றும் தெரிவித்தார்.
ப சிதம்பரம்
மே 12-ம் தேதி முதல் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இடையிலான கூட்டம் நடைபெற இருப்பதாகக் கூறப்படும் நிலையில் ப சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமித் ஷா
பாஜக கட்சி தலைவரான அமித் ஷா செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்கள் சந்தித்த போது அரசுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களுடன் விவாதிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்து இருந்தார்.
வரலாறு காணாத உயர்வு
சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் எண்ணெய் நிலை எப்போது இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கர்நாடக தேர்தலின் போது ஒரு பக்கம் மத்திய அரசு பெட்ரோல் விலையினை ஏற்ற அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகு தாறுமாறாகப் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
மறுத்த எண்ணெய் நிறுவனங்கள்
எண்ணெய் நிறுவனங்களிடம் இது குறித்துக் கேட்ட போது ரீடெயில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து எந்த ஒரு உத்தரவாதமும் மத்திய அரசு இது வரை எங்களுக்கு அளிக்கவில்லை என்று கூறியுள்ளன. இதனைப் பார்க்கும் போது மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்வினை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு உள்ள அனுமதி
மத்திய அரசு தினமும் பெட்ரோல், டீசல் விலையினை மாற்றி அமைக்கத் தங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும், அதற்கான சூத்திரத்தின் படி நாங்கள் அதனை மாற்றி அமைத்து வருகிறோம் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.