அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தினர்.
இப்போராட்டத்திற்காகச் சுமார் 13 பேர் உயிர் தியாகம் செய்துள்ள நிலையில், தமிழக அரசு தூத்துக்குடி ஆலையை நிரந்தகமாக மூட உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு-க்குப் பின் தமிழக மக்களின் புரட்சி போராட்டத்திற்குக் கிடைத்த 2வது வெற்றி என்பதைத் தாண்டி 13 பேர் ரத்தம் சிந்தி பெற்ற வெற்றி இது.
தமிழக அரசு இந்நிறுவனத்தின் மீது தடை விதிக்கப்பட்ட நிலையில், வேதாந்தா நிர்வாகம் இந்தத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது என வைகோ தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் மக்களின் போராட்டம் மற்றும் தமிழக அரசின் முடிவை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இந்நிறுவனத்தை நிரந்தரமாக மூடவும் முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் நாளை காலை மும்பை பங்குச்சந்தையில் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் பெரிய அளவிலான சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த உத்தரவை அடுத்து லண்டன் பங்குச்சந்தையில் இருக்கும் வேதாந்தா ரிசோர்ஸ்சஸ் நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பதம் பார்க்கும் எனத் தெரிகிறது. திங்கட்கிழமை லண்டன் பங்குச்சந்தை விடுமுறை.