2017-2018 நிதி ஆண்டிற்கான 4-ம் காலாண்டின் ஜிடிபி தரவுகளை இன்று மத்திய அரசு வெளியிட்டது அதில் மீண்டும் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரத்தினைக் கொண்ட நாடாக முன்னேறி 7.7 சதவீதத்தினை எட்டியுள்ளது தெரியவந்துள்ளது. 2017-2018 நிதி ஆண்டில் சராசரியாக 6.8 சதவீத ஜிடிபி-ஐ இந்தியா பெற்றுள்ளது.
ப்ளூம்பெர்க் நடத்திய சர்வேயில் இந்தியாவின் ஜிடிபி 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு இதுவே அதிகமாகும்.
தொழில் துறை உற்பத்தி
இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி மார்ச் மாதம் இருந்த 4.4 சதவீதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் 4.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
விவசாயம்
விவசாயத் துறையில் 4.5 சதவீதமும், உற்பத்தித் துறையில் 9.1 சதவீதமும், கட்டுமான துறையில் 11.5 சதவீதமும் வளர்ச்சி பெற்று ஜிடிபி-க்கு உதவியுள்ளன.
கச்சா எண்ணெய்
எனினும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த காரணத்தினால் ஏப்ரல் மாதம் பணவீக்கம் உயர்ந்து பொருளாதாரமும் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வது இந்தியாவின் இறக்குமதியை 50 பில்லியன் டாலராக உயர்த்தும் நிலைக்குத் தள்ளியுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018-2019 எப்படி இருக்கும்?
2018-2019 நிதி ஆண்டில் சாதாரணப் பருவமழை மற்றும் தனியார் முதலீடு அதிகரிப்பு போன்றவையால் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதத்திற்கும் கூடுதலாக உயரும் என்று வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முந்தைய ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி
2014-2015 நிதி ஆண்டில் 7.4 சதவீதமாகவும், 2015-2016 நிதி ஆண்டில் 8.2 சதவீதமாகவும், 2016-2017-ல் 7.1 சதவீதமாகவும் இந்தியாவின் ஜிடிபி இருந்தது குறிப்பிடத்தக்கது.