சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து கூடுதலாகப் பெறப்பட்ட வரியிஅனை திருப்பி அளிப்பதில் சிக்கல் இருந்தது வந்ததது. எனவே ஏற்றுமதியாளர்களிடமிருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை திருப்பி அளிப்பதற்கான சிறப்பு இருவார முகாம் (இன்று) 31.05.2018 தொடங்கி 14.06.2018 வரை நடைபெறவுள்ளது.
ஏற்றுமதியாளர்கள் செலுத்திய கூடுதல் ஜிஎஸ்டி வரியை திருப்பி அளிப்பது, அரசு மற்றும் வணிகர்கள் ஆகிய இருதரப்பினருக்குமே கடந்த பல மாதங்களாகப் பெரும் கவலையை அளிப்பதாக உள்ளது. இந்த நிலையை மாற்ற, மத்திய நிதித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இதுவரை, ரூ.30,000 ஆயிரம் கோடிக்குமேல் திருப்பியளிக்கப்பட்டுள்ளது.
முதலாவது சிறப்பு முகாம்
மார்ச் 2018ல் நடைபெற்ற முதலாவது சிறப்பு இருவார முகாமிற்குப் பிறகு, ஜிஎஸ்டி வரியை திருப்பியளிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி வெளியான நிலையில், மே 2018ல் மட்டும் எட்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்குத் திருப்பியளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சுமார் ரூ.14,000 கோடி அளவிற்கு அரசால் திருப்பி அளிக்கவேண்டியுள்ளது.
இரண்டாவது சிறப்பு முகாம்
இந்நிலையில், இரண்டாவது சிறப்பு இருவார முகாமிற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 31.05.2018 தொடங்கி 14.06.2018 வரை நடைபெறவுள்ள இந்த " சிறப்புத் திருப்பியளிப்பு இருவார " முகாமின்போது, சுங்க வரி, மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் பங்கேற்று, 30.04.2018 வரை வரப்பெற்ற விண்ணப்பங்களுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. ஜி.எஸ்.டி. ஆர்.எஃப்.டி.- 01A படிவத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி, பயன்படுத்தப்படாத ஐ.டி.சி மற்றும் பிற அனைத்து ஜிஎஸ்டி வரிகளும், திருப்பியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பம் மட்டும் போதாது?
கூடுதலாகச் செலுத்திய வரித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கு, ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தால் மட்டும் போதாது என்றும், சம்பந்தப்பட்ட வரிவிதிப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தின் நகலை உரிய ஆவணங்களுடன் இணைத்துச் சமர்ப்பிப்பது அவசியம் என்றும், மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கவரி வாரியம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதியாளர்கள்
ஏற்றுமதியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களுக்குக் கிடைக்கவேண்டிய தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.