பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நீண்ட காலமாக இந்திய பொதுத் துறை நிறுவனமாக இயங்கி வரும் ஏர் இந்தியாவைத் தனியார் மையமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நட்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியாவை வாங்க டெண்டர் விடப்பட்ட நிலையில் அதற்கான காலக்கெடு வியாழக்கிழமை 01/06/2018-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதில் என்ன ஆச்சர்யம் என்னவென்றால் இந்த நிறுவனத்தினை யாரும் வாங்க முன்வரவில்லை. ஒரு டெண்டர் விண்ணப்பம் கூடக் கோரப்படவில்லை என்பதே ஆகும். ஒரு விமானப் போக்குவரத்து நிறுவனம் கூட இந்த நிறுவனத்தினை வாங்க முன்வராததற்கு முக்கியக் காரணம் அரசு விதித்திருக்கும் கடுமையான விதிகளே காரணம் என்றும் அதனைக் குறைத்தால் வாங்க முன்வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடன்
ஏர் இந்தியா நிறுவனம் 45,000 கோடிக்கும் அதிகமாகக் கடனில் சிக்கி தவித்து வரும் நிலையில் அதனையும் ஈடு செய்யம் அளவிற்கு எந்த ஒரு நிறுவனம் வாங்க முன்வருகிறதோ அவர்களுக்குத் தான் விற்போம் என்றுள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
டெண்டர்
டெண்டர் விடப்பட்டதில் இருந்து ஒரு நிறுவனம் கூட அதனை வாங்க முன்வரவில்லை. வாங்க பேச்சுவார்த்தை நடத்தும் நிறுவனங்களும் பல சலுகைகளை அதில் எதிர்பார்த்தனர்.
முக்கிய முடிவுகளை யார் எடுப்பார்கள்?
ஏர் இந்தியாவை விற்பதற்கான முடிவுகள் பிரதமருக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர்களான அருண் ஜேட்லி, சுரேஷ் பிரபு, நிதின் கட்காரி மற்றும் பியுஷ் கோயல் உள்ளிட்டவர்கள் வசம் உள்ளது.
பங்குகள்
விமான நிறுவனத்தினை விற்றாலும் அதில் 24 சதவீத பங்குகளை அரசு வைத்துக்கொள்ளவே முடிவு செய்துள்ளதது. மீதம் உள்ள 76 சதவீத ஏர் இந்தியா பங்குகளை மட்டுமே விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை வைத்துப் பார்க்கும் போது ஏர் இந்தியா நிறுவனத்தினை விற்றாலும் அதில் 24 சதவீத பங்குகளைத் தொடர்ந்து தேசிய விமானப் போக்குவரத்தாகச் செயல்படுத்தும் திட்டத்தில் தான் உள்ளது என்பது தெரிகிறது.
விமானங்கள் & சேவைகள்
ஏர் இந்தியா நிறுவனத்திடம் 100 போயிங் விமானங்கள் மற்றும் ஏர்பஸ் போன்றவை உள்ளன. இவை வாரத்திற்கு 2,300 உள்ளூர் விமானச் சேவைகளை 54 விமான நிலையங்களுக்கு அளித்து வருகிறன. அதுமட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் 2,543 விமான நிலையங்களுக்கு விமானச் சேவையினை வழங்க அனுமதிகளை வைத்துள்ளது.
முந்தைய தோல்வி
இந்திய அரசு இதற்கு முன்பு ஒரு முறை விற்க முயன்றும் அப்போதும் அது அரசியல் காரணங்களுக்காகத் தோல்வியில் தான் முடிந்துள்ளது. 2001-ம் ஆண்டுச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவில் இருந்த பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.