சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு முதன் முறையாக ஏப்ரல் மாதம் 1.03 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டது. இதுவே மே மாதம் 94,016 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே மாதம் 62.47 லட்சம் வணிகர்கள் ஜிஎஸ்டிஆர் - 3பி அறிக்கையினைத் தாக்கல் செய்துள்ளனர்.
மே மாத ஜிஎஸ்டி வசூல் நிலவரம்
2018 மே மாதம் வசூலிக்கப்பட்டுள்ள 94,016 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாயில் மத்திய ஜிஎஸ்டி 15,866 கோடி ரூபாய், மாநில ஜிஎஸ்டி 21,691 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி 49,120 கோடி ரூபாய் மற்றும் செஸ் 7,339 கோடி ரூபாய் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் எப்படி 1.03 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது?
ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது மே மாத ஜிஎஸ்டி வரி வருவாய் சரிந்துள்ள நிலையில், சென்ற நிதி ஆண்டின் மொத்த சராசரி ஜிஎஸ்டி வருவாயான 89,885 கோடி ரூபாயுடன் ஒப்பிடும் பொது அதிகமாகவே உள்ளது. ஆண்டு முடிவு வரி தாக்கல் என்பதால் ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகமாகவே இருக்கும் என்றும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
மாநில இழப்பீடு
2018 மே 29-ம் தேதி 6,696 கோடி ரூபாயினை மத்திய அரசு 2018 மார்ச் மாதத்திற்கான மாநில ஜிஎஸ்டி இழப்பீடாக அளித்துள்ளது.
2017-2018 நிதி ஆண்டில் அதாவது ஜிஎஸ்டி அமலுக்கு வந்த ஜூலை 2017 முதல் 2018 மார்ச் வரை 47,844 கோடி ரூபாய் மாநிலங்களுக்கான இழப்பீடாக மத்திய அரசு வழங்கியுள்ளது.
இ-வே பில்
மே மாத 94,016 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் சென்ற நிதி ஆண்டின் சராசரி ஜிஎஸ்டி-ஐ விட அதிகமாக இருக்கும் நிலையில் இ-வே பில் சேவை மற்றும் சீர்திருத்த பணிகள் முறையாக நடைபெறுவதைக் காட்டுகிறது என்றும் நிதி அமைச்சக செயலாளரான ஹஸ்முக் ஆதியா டிவிட் மூலம் தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் ஜூன் 3 முதல் நாடு முழுவதும் இ-வே பில் முறை செயல்படத் துவங்குவதால் கூடுதலான ஜிஎஸ்டி வருவாய் கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகின்றனர்.