ஐடியா செல்லுலார் நிறுவனமும், வோடாஃபோன் நிறுவனமும் முழுமையாக இணைவதற்கான இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 26-ம்தேதி பங்குதாரர்களுடனான கூட்டம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளனர்.
அந்தக் கூட்டத்தின் போது ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் பெயரை மாற்றுவது மற்றும் 15,000 கோடி ரூபாய் முதலீடுகளைத் திரட்டுவது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
புதிய பெயர்?
வோடாஃபோன் நிறுவனத்துடன் ஐடியா செல்லுலார் விரைவில் முழுமையாக இணைய உள்ள நிலையில் வோடாஃபோன் ஐடியா என்று பயரை மாற்ற முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
எப்படி?
பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தில் தங்களது அறிக்கையினைத் தாக்கல் செய்துள்ள ஐடியா செல்லுலார் நிறுவனம் பெயர் மாற்றத்திற்காக மத்திய அரசு அல்லது பிற அதிகாரம் படைத்த வேறு எந்த அதிகாரம் தேவைப்படுமோ அதன் கீழ் பெயர் மாற்றம் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இணைவு
வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணையும் போது இந்திய டெலிகாம் சந்தையின் 42 சதவீத வாடிக்கையாளர்கள் மற்றும் 37 சதவீத வருவாயினைக் கொண்டு இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக வோடாபோன் ஐடியா உருவெடுக்கும்.
வலிமை
வோடாபோன் நிறுவனத்திற்கு நகரங்கள் மற்றும் புற நகரங்களில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் ஐடியா நிறுவனத்திற்கு இந்தியாவின் கிராமப்புறங்களில் அதிக வாடிக்கையாளர்களும் உள்ளனர். இருவரும் இணையும் போது போட்டி நிறுவனங்களுக்கு எதிரான வலிமையான நிறுவனமாக வோடோபோன் ஐடியா இருக்கும்.
ஜியோ
2016-ம் ஆண்டு ஜியோ நிறுவனம் வணிக ரீதியான சேவைகளை இலவசங்களுடன் துவங்கிய போது போட்டி நிறுவனங்களாக இருந்து வந்த ஏர்டெல், ஐடியா மற்றும் வோடாபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆடிப்போயின. எந்த ஒரு முயற்சி எடுத்தும் டிராய் ஜியோவிற்குச் சாதகமாக இருந்த நிலையில் வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்தன.
முதலீடுகள்
இரு நிறுவனங்களும் இணைவது மட்டும் இல்லாமல் 15,000 கோடி ரூபாய் நிதியை முதலீட்டாளர்களிடம் இருந்து எப்படிப் பெறுவது மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவது குறித்த முடிவுகளை எல்லாம் விரைவில் நடக்க உள்ள கூட்டத்தில் ஐடியா செல்லுலார் எடுக்க உள்ளது.
வாடிக்கையாளர்கள்
மார்ச் மாதம் வரையிலான கணக்கின் படி இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்திற்கு 304.9 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அடுத்தபடியாக வோடா போன் நிறுவனம் வசம் 222.69 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஐடியா நிறுவனத்திற்கு 211.2 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம்
வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைந்து வோடாபோன் ஐடியா எனப் பெயர் எடுக்கும் போது இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக இது இருக்கும்.