அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்பார்த்து இருந்த ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்ததைப் போலவே நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மேம்படும் வகையில் நீண்ட கால அடிப்படையில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து 6.25 சதவீதமாக அறிவித்துள்ளது.,
4.5 வருடத்திற்குப் பின் முதல் முறையாக ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ரெப்போ விகிதம்
இன்று நடந்து முடிந்த நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை அமைப்பு தனது ரெப்போ விகிதத்தை 6 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இதன் வாயிலாக ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 6 சதவீதமாகவும், எம்எஸ்எப் மற்றும் வங்கி விகிதங்களை 6.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
பணவீக்கம்
மேலும் இன்றைய கூட்டத்தில் ரிசர்வ் வங்கி 2019ஆம் நிதியாண்டுக்கான நுகர்வோர் பணவீக்க அளவுகளை 4.8 சதவீதத்தில் இருந்து 4.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
அதேபோல் அக்டோபர் - மார்ச் காலகட்டத்தில் பணவீக்கம் 4.7 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
2019ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாகவும், அக்டோபர்-மார்ச் காலகட்டத்தில் 7.3-7.4 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணித்துள்ளது ரிசர்வ் வங்கி.
பத்திர முதலீடு
இன்று ரிசர்வ் வங்கி தனது வட்டி விகித்தை உயர்த்தியதன் மூலம் பத்திர முதலீடு மீதான லாபம் அதிகரிக்கும். இதன் வாயிலாகக் கடன் சந்தையிலும், பங்கு சந்தையிலும் அதிகளவிலான அன்னிய முதலீட்டு அளவுகள் பெரிய அளவில் உயரவும்.
மக்களுக்குக் கஷ்டம்
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியை மட்டும் அல்லாமல் 2019ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 4.9 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது. இதனால் மக்கள் பயன்படுத்தும் அந்தியாவச பொருட்கள் அனைத்தும் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
வங்கிக் கடன்
ரிசர்வ் வங்கி இன்று வட்டியை உயர்த்தியதன் வாயிலாக வணிக வங்கிகள், அதாவது எஸ்பிஐ, ஐசிஐசிஐ போன்ற வங்கிகள் தனது கடனுக்கான வட்டியை உயர்த்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதன் மூலம் மக்கள் வங்கிகளில் வாங்கியுள்ள வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் என அனைத்துக் கடன்களின் ஈஎம்ஐ-யும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி முட்டுக்கொடுத்தது
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் ஏற்பட்ட வர்த்தகச் சரிவு மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளைக் களைய தொடர்ந்து வட்டி விகிதத்தைக் குறைத்துப் பொருளாதாரம் சரிவாகாமல் தொடர்ந்து நிலைபெற ரிசர்வ் வங்கி முட்டுக்கொடுத்தது.
4.5 வருட
இன்றைய நாணய மறுஆய்வு கொள்கை கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் 4.5 வருடத்திற்குப் பின் முதல்முறையாக வட்டியை உயர்த்தியுள்ளது.
உர்ஜித் பட்டேல்
மேலும் ரிசர்வ் வங்கியின் கவர்னராக உர்ஜித் பட்டேல் பதவியேற்றிய பின் முதல் முறையாக அவர் வட்டி உயர்த்தியதும் இதுதான். இன்றைய வட்டி விகித உயர்வின் மூலம் அன்னிய முதலீட்டாளர்களுக்கும், உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் சிறப்பான வாய்ப்பு அமைந்துள்ளது.
பொதுத் தேர்தல்
மேலும் 2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வரும் நிலையில், பொருளாதாரம் மற்றும் முதலீட்டு சந்தையைச் சீர்ப்படுத்தும் நடவடிக்கையாகவே தற்போது ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு பார்க்கப்படுகிறது.