சென்னை: வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான கவின்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வணிகத்தினைப் பெருக்கும் நோக்கத்தில் இரண்டு ஆண்டுகளில் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பங்குகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
எப்போது?
கவின்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சி கே ரங்கநாதன் 2019 பொதுத் தேர்தல் முடிந்த பிறகு அல்லது 2020-ம் ஆண்டில் பங்கு சந்தையில் ஐபிஓ மூலம் வர இருப்பதாகக் கூறியுள்ளார்.
மதிப்பு
எப்எம்சிஜி நிறுவனமான கவின்கேர் தற்போது 1 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்ரேட் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ஐபிஓ
கவின்கேரின் வர்த்தகத்தினை விரிவு படுத்த நிதி தேவைப்படுவதாகவும் அதற்காக 500 கோடி முதல் 1,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட முடிவு செய்துள்ளதாகவும், மேலும் அதன் துணை நிறுவனமான டிரெண்ட்ஸ் இன் வோக்யூ பங்குகளையும் விரைவில் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் வெளியிட இருப்பதாகவும் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
டிரெண்ட்ஸ் இன் வோக்யூ
டிரெண்ட்ஸ் இன் வோக்யூ வசம் இப்போது நாடு முழுவதும் 400 சலூன்கள் உள்ளன. ஐபிஓ-ல் பங்குகளை வெளியிடுவதன் மூலம் 1,000 சலூன்களாக இதனை அதிகரிக்க உள்ளதாகவும் திட்டமிட்டுள்ளனர்.
வெளிநாட்டு வர்த்தகம்
இந்தியா மட்டுமில்லாமல் இலங்கை, வங்க தேசம் ஆகிய நாடுகளிலும் அங்குள்ள வரி கட்டமைப்பிற்கு ஏற்றவாறு நிறுவனங்களைக் கட்டமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வருவாய்
சென்ற ஆண்டுக் கவின்கேர் நிறுவனம் 1,600 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய நிலையில் நடப்பு ஆண்டு 2,000 கோஇ ரூபாய் வருவாயினை இலக்காக வைத்துள்ளதாக ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.