பெங்களூரு: ஸ்வீடிஷ் வணிக வாகன உற்பத்தியாளரான ஸ்கானியா செவ்வாய்க்கிழமை பெங்களூரு அருகில் உள்ள தங்களது பேருந்து பாடி பில்டிங் பட்டறையை மூட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஸ்கானியா பேருந்து உற்பத்தியினை நிறுத்திவிட்டு இறக்குமதி மூலம் மட்டுமே வர்த்தகத்தினைத் தொடர இருப்பதாகவும் இதற்காக வணிகத்தினை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
காரணம்
இந்தியாவில் பிரீமியம் பேருந்து உற்பத்தியினை ஸ்கானியா நிறுவனம் செய்து வந்த நிலையில் அதற்காகத் தேவை இங்கு மிகவும் குறைவாக உள்ளதால் மூட இருப்பதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றனர்.
ஸ்கானியா
இந்தியாவில் ஸ்கானியா நிறுவனம் 300 கோடி ரூபாய் முதலீட்டில் டிரக் மற்றும் பெங்களூருவில் பேருந்து கட்டமைப்புப் பட்டறை இரண்டையும் இயக்கி வந்தது.
உற்பத்தி
ஸ்கானியா இந்தியா நிறுவனம் ஆனது ஆண்டுக்கு 2,500 டிரக்குகளும், 1,000 பேருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது இந்த உற்பத்தியை நிறுத்த முடிவு செய்து இருப்பினும் எப்போதும் போலப் பேருந்துகளும், டிரக்குகளும் கிடைக்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் ஸ்கானியா தெரிவித்துள்ளது.
லாபம் இல்லை
இந்தியாவில் பிரீமியம் பேருந்து மற்றும் டிரக்க்குகளுக்குத் தேவை மிகவும் குறைவாக உள்ளதாகவும் அதனால் ஆர்டர்கள் குறைவாக உள்ளது மட்டும் இல்லாமல் லாபமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஊழியர்கள்
ஸ்கானியா இந்தியாவில் 500 ஊழியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் அவர்களின் வேலை பறிபோக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் பெரும்பாலான ஒப்பந்த ஊழியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 111 நேரடி ஸ்கானியா ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் 44 ஊழியர்கள் மற்றும் தக்கவைத்துக்கொண்டு எப்போதும் போல வர்த்தகத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆர்டர்கள்
தற்போது ஸ்கானியா வசம் பேருந்துக்கான ஆர்டர்கள் ஏதுமில்லை என்றாலும் சந்தைக்குத் தேவையான ஸ்டாக்குகளை அவுட் சோர்ஸ் முறையில் பெற முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பணிநீக்க திட்டம்
ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் நிலையில் அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்திச் செய்யத் தேவையான உதவிகளை நிறுவனம் செய்யும் என்றும் ஸ்கானியா தெரிவித்துள்ளது.