இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ ஜூன் மாதம் முதல் தகுதி உள்ள ஊழியர்களுக்கு மட்டும் 6 முதல் 7 சதவீத சம்பள உயர்வினை அறிவித்துள்ளது.
முன்பு இதே போன்ற ஒரு சம்பள உயர்வை டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களும் அறிவித்து இருந்தன. அதே நேரம் கேப்ஜெமினி நிறுவனம் வெறும் 0.5 முதல் 1 சதவீத சம்பள உயர்வினை மட்டுமே அளித்து இருந்தது.
அனைவருக்குமில்லை
விப்ரோ நிறுவனம் ஊழியர்களுக்கு 6 முதல் 7 சதவீத சம்பள உயர்வினை அறிவித்த போதிலும் சில ஊழியர்களுக்கு அளிக்கவில்லை என்றும் அவர்களைத் தங்களது குழு தலைவர் மற்றும் மேலாளர்களுடன் ஆலோசிக்கக் கோரியும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
என்ன செய்ய வேண்டும்?
மேலும் சம்பள உயர்வு பெறாத ஊழியர்கள் தங்களது திறன் மற்றும் உற்பத்தி அளவினை அதிகரிக்க வேண்டும் என்று விப்ரோ நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளதாகவும் சிலரைப் பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
விப்ரோ
அதே நேரம் எவ்வளவு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு இல்லை என்ற விவரங்களை விப்ரோ நிறுவனம் தெரிவிக்கவில்லை. சம்பள உயர்வு பெறாத ஊழியர்கள் அவர்களது மேற்பார்வையாளர்கள் மற்றும் மனித வளம் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு வளர்ச்சி குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு பாகுபாடு
இந்தியாவில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்குக் குறைந்த அளவிலான சம்பள உயர்வும், வெளிநாட்டில் உள்ள ஊழியர்களுக்கு அதிகச் சம்பள உயர்வு விகிதம் எனவும் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அதிகச் சம்பள உயர்வு பெற்றவர்கள்
சிறப்பான திறனை வெளிப்படுத்தி மிக முக்கியத் தொழில்னுட்ப திட்டங்களினை கவனித்து வரும் ஊழியர்களுக்குச் சிறப்பான ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐடி துறை
ஐடி துறையில் புதிய தொழில்நுட்பத்தில் அதிகத் திறன் படைத்து ஊழியர்களுக்கு அதிகச் சம்பள உயர்வு அளிப்பது என்பது பொதுவானது என்பது குறிப்பிடத்தக்கது.