புதிதாக வீடு வாங்குபவர்கள் பில்டர்களிடம் பல விதமான பிரச்சனைகளைச் சந்திப்பது வாடிக்கையாகியுள்ளது. பணத்தை முழுவதுமாகச் செலுத்திவிட்டு வீட்டை உரிமையாளர்களிடம் குறித்த நேரத்தில் கொடுக்காமல் ஒரு வருடம் முதல் 5 வருடம் வரையில் இழுத்தடிப்பது, திட்டத்தை முழுமையாக முடிக்காமல் வைத்திருப்பது எனப் பல இடங்களில் நடந்துள்ளது.
இந்த மோசமான நிலையைச் சமாளிக்க மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இனி வீடு வாங்குபவர்களுக்குப் பில்டர்களை எதிர்க்க புதிய ஆயுதம் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டம்
இனி வீடு வாங்குபவர்கள் பைனான்சியல் கிரெடிட்டார்ஸ் (வங்கிகள் போல) ஆகக் கருதப்படுவார்கள், இதன் மூலம் 2018 ஐபிசி சட்டதிட்டங்கள் படி ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அல்லது பில்டர் நிறுவனங்கள் மீது நொடித்து வழக்குப் பதிவு செய்து தீர்மான குழுவில் இடம்பெற்று அந்த நிறுவனங்களுக்கு எதிராக முடிவுகளை எடுக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
இப்புதிய சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து அமலாக்கம் செய்துள்ளார்.
பிரிவு 7
2018 ஐபிசி சட்டத்தின் பிரிவு 7இன் கீழ் வீடு வாங்குபவர்கள் ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அல்லது பில்டர் எதிராக நொடிப்புத் தீர்மானம் கொண்டு வழக்குத் தொடுக்கலாம்.
தீர்வு
இதன் மூலம் ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ், பில்டர் நிறுவனங்கள் செய்யும் காலத் தாமதம், கூறியபடி முழுமையாக முடிக்கப்படாத திட்டங்கள் என வீடு வாங்குபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இதன் மூலம் எளிதாக தீர்வு காண முடியும்.
தனிஒருவன் போதும்
ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அல்லது பில்டர் நிறுவனங்களுக்கு எதிராக வீடு வாங்கிய ஒருவர் தேசிய நிறுவன சட்ட தீர்பாயத்திடம் சென்றால் கூட இந்த நிறுவனத்தின் மீது நொடித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காப்பரேட் விவகார துறை செயலாளர் இன்ஜீத் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டணி
மேலும் வழக்கில் வீடு வாங்குபவர்கள் உறுதியாக நிற்க வேண்டும் என்றால் பிரச்சனையைச் சந்திக்கும் வீடு வாங்குபவர்கள் குழுவாக நின்று எதிர்த்தால் கண்டிப்பாகத் தீர்வு காணமுடியும் என வீட்டு வசதி துறை அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி தெரிவித்துள்ளார்.
ஐபிசி சட்டம்
இந்தியாவில் ஐபிசி சட்டம் அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு அதீத கடனில் இருந்த பல நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தீர்வு காணப்பட்டு வருகிறது.