மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் டாக்சி நிறுவனமாக வளர்ந்துள்ள ஓலா நிறுவனம் 2010-ம் ஆண்டு மும்பையில் 1 படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டில் துவங்கப்பட்டது. ஐஐடி மும்பை பட்டதாரிகளான பாவிஷ் அகர்வால் மற்றும் அங்கிட் பாட்டி என்பவர்களால் துவங்கப்பட்டு இந்திய டாக்சி சந்தையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஓலா நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 32,500 கோடி ரூபாய் ஆகும்.
இந்திய ஆன்லைன் டாக்சி சந்தையில் 65 சதவீதத்தினைத் தன் வசம் வைத்துள்ள ஓலாவின் பயணம் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
வருவாய் எப்படி வருகிறது?
ஓலா நிறுவனத்தின் வருவாய் என்பது கார் ஓட்டுநர்களிடம் இருந்து பெறப்படும் கமிஷன் திகையாகும். வாடிக்கையாளர்களைக் கார் ஓட்டுநர்களுக்கு அளிப்பதற்காக இந்தக் கமிஷன் திகையினை ஓலா பெறுகிறது.
எவ்வளவு வருவாய்?
ஒலா நிறுவனம் 2013-2014 நிதி ஆண்டில் 51.05 கோடி ரூபாயும், 2014-2015-ல் 418.25 கோடி ரூபாயும், 2015-2016-ல் 758.23 கோடி ரூபாயும் பெற்று இருந்தது. இதுவே 2016-2017 நிதி ஆண்டில் 2013-2014 நிதி ஆண்டினை விட 2,400 சதவீதம் கூடுதல் வருவாய் உடன் 1,286 கோடி ரூபாயினை வருவாய் ஆக ஓலா பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வருவாய் பெற்று இருந்த அதே நேரம் மிகப் பெரிய நட்டங்களைக் கடந்த சில ஆண்டுகளாக ஓலா பெற்றுள்ளது.
நட்டம்
ஓலா 2013-2014 நிதி ஆண்டில் 34.21 கோடி ரூபாயும், 2014-2015 நிதி ஆண்டில் 754.87 கோடி ரூபாயும் நட்டம் அடைந்து இருந்தது. இதுவே 2015-2016 நிதி ஆண்டில் லாபத்தில் 2,313 கோஇ ரூபாயினை நட்டம் அடைந்தது. இது 2013-2014 உடன் ஒப்பிடும் போது 6,600% நட்டம் ஆகும்.
நிதி திரட்டல்
கடந்த 8 ஆண்டுகளில் ஓலா நிறுவனம் 14 முறை நிதி திரட்ட முயன்று 20,104.5 கோடி ரூபாயினை முதலீடாகப் பெற்றுள்ளது. அதிலும் 2017-2018 நிதி ஆண்டில் மட்டும் 9,396 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. ஓலா நிறுவனத்தில் 25 முதலீட்டாளர்கள் உள்ள நிலையில் அவர்களில் சாப்ட்பாங்க், டென்செண்ட் ஹோல்டிங்ஸ் உள்ளிட்டவை முக்கிய முதலீட்டாளர்கள் ஆவர்.
சேவைகள்
2016-ம் ஆண்டு ஓலாவில் 4.5 லட்சம் வாகனங்கள் மட்டுமே இணைக்கப்பட்ட நிலையில் தற்போது 50 முதல் 60 லட்சம் வாகனங்கள் நாடு முழுவதும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் 1 லட்சத்திற்கும் அதிகமாக ஆட்டோக்களும் அடங்கும்.
நகரங்கள்
ஓலா நிறுவனம் 50 லட்சம் வாகனங்களுடன் 110 நகரங்களில் டாக்சி சேவை அளிப்பது மட்டும் இல்லாமல் தற்போது ஆஸ்திரேலியாவிலும் தனது சேவையினைத் துவங்கியுள்ளது.
பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்
ஓலா டாக்சி சேவை துவங்கப்பட்ட இந்த 8 ஆண்டுகளில் பல்வேறு தொழில்நுட்பங்களைத் தங்களது சேவையில் இணைத்துள்ளது. ஜிபிஎஸ், நேவ்கேஷன் என்பது மட்டும் இல்லாமல் பயணத்தின் போது வைஃபை சேவை, யூபிஐ பணம் செலுத்தும் முறை, எஸ்ஓஎஸ் அவசர சேவை போன்றவை எல்லாம் அளிக்கிறது.
தலைமை நிர்வாக அதிகாரி
இவ்வளவு பெரிய டாக்சி நிறுவனத்தினைக் கட்டமைத்துள்ள பாவிஷ்க்குத் தற்போது வரை சொந்தமாகக் கார் கிடையாது. அது மட்டும் இல்லாமல் கார் வாங்கவே மாட்டேன் என்று சபதமும் எடுத்துள்ளார்.
வார இறுதி பயணங்கள்
ஓலா நிறுவனம் வார இறுதி பேக்கேஜ் பயணங்களையும் செயலி மற்றும் இணையதளம் வாயிலாக அளிக்கிறது.
வாகன வரிசை
ஓலா நிறுவனத்தின் வாகனங்களைக் கன்னியாகுமரி முதல் காஷ்மிர் வரையில் 3,895 கிலோ மீட்டர் தொலைவிலும் வரிசையாக நிறுத்தக்கூடிய அளவிலான வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பயணம்
ஒலா நிறுவனம் ஒரு நாளைக்குச் சராசரியாக 43.4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலான பயணச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இது பூமி - நிலா இடையிலான தொலைவினை விட 10 மடங்கு அதிகம் ஆகும்.
போட்டி
ஓலா நிறுவனத்திற்குப் போட்டியாகப் பல நிறுவனங்கள் இருந்தாலும் முக்கியப் போட்டி நிறுவனமாக இருப்பது என்றால் அது உபர் மட்டுமே ஆகும்.
நிறுவனங்கள் கையகப்படுத்துதல்
ஓலா நிறுவனம் ஃபுட் பாண்டா உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் மற்றும் ரிட்லர் போக்குவரத்து செயலி நிறுவனத்தினையும் கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.