நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கியில் வீடியோகான் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கடனில் இவ்வங்கி தலைவர் சந்தா கோச்சார் தனது குடும்ப நிறுவனமும் இணைந்து முறைகேடு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுத் தற்போது இதற்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விசாரணையில் அமெரிக்கா SEC (Securities and Exchange Commission) அமைப்பும், மொரிஷியஸ் அமைப்பும் தற்போது இணைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்திய அமைப்புகள் அழைப்பின் பேரில் தற்போது வெளிநாட்டு அமைப்புகளும் இந்த விசாரணையில் ஈடுபட உள்ளது.
இதன் மூலம் சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்கான கடனுக்கு அனுமதி அளித்தது முறையானதா? அல்லது முறையற்றதா? என்பது விசாரணை செய்யப்பட்டுக் கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும்.
இதுமட்டும் அல்லாமல் தற்போது சந்தா கோச்சார் சில வாடிக்கையாளர்களிடம் முறையற்ற வகையிலும், விருப்பம் மற்ற வகையிலும் வேண்டுமென்ற நடந்துகொள்கிறார் என இவர் மீது முக்கியமான குற்றச்சாட்டு வந்துள்ளது.
இந்தப் பிரச்சனை தற்போது ஐசிஐசிஐ நிர்வாகம் மத்தியில் பெரிய அளவில் வெடித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டைத் தற்போது ஐசிஐசிஐ நிர்வாகம் தனிப்பட்ட முறையில் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
மறுபுறம் இவர் தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி தலைவராக இருக்கக் கூடாது எனவும் நிர்வாக மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர்.