ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங், ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆட்டம் காட்டி சியோமி, டிவி சந்தையில் மலிவான விலையுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
சியோமி அறிமுகத்திற்குப் பின் ஆசிய சந்தையில் கொடிகட்டி பறக்கும் முன்னணி டிவி விற்பனையாளர்களான சாம்சங், எல்ஜி, சோனி ஆகியவை அதிர்ந்துபோன நிலையில் சாம்சங் தற்போது சியோமியுடன் போட்டி போட தயாராகியுள்ளது.
சாம்சங் முடிவு
சியோமியால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கும் என உணர்ந்த சாம்சங் இதுவரை செய்யாத வகையில் பெரிய திரை கொண்டு டிவிகளின் ஆரம்ப மாடல்களின் விலையைச் சுமார் 20 சதவீதம் வரையில் குறைத்துள்ளது.
இதனால் சாம்சங் வாடிக்கையாளர்களை மட்டும் அல்லாமல் பிற நிறுவன வாடிக்கையாளர்களையும் இந்த விலை குறைப்பு திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
டிசிஎல் மற்றும் சியோமி
சியோமி மற்றும் டிசிஎல் நிறுவனங்கள் இந்தியாவில் விற்கப்படும் டிவிகளின் விலையைத் தாறுமாறாகக் குறைந்துள்ள நிலையில், தற்போது சியோமி இந்தியாவிலேயே டிவியைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் சியோமி டிவிகளின் விலை மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளது.
அடுத்த விலை குறைப்பு...
இந்நிலையில் சாம்சங் டிவி வர்த்தகச் சந்தையில் தனக்கான இடத்தை இழக்கக் கூடாது எனத் தற்போது முதல் கட்டமாக 20 சதவீதம் வரையில் விலையைக் குறைத்துள்ளது. அடுத்தச் சில மாதங்களில் சாம்சங் இன்னும் பல மாடல்களின் விலையை 50-60 சதவீதம் வரையில் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சாம்சங் நிறுவனத்தின் வர்த்தகக் கூட்டணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
22,000 கோடி ரூபாய்
சீன நிறுவனங்கள் 22,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியா டிவி சந்தையைக் குறிவைத்து பெரிய அளவிலான திட்டத்துடன் இறங்கியுள்ளது. இதுநாள் வரையில் சாம்சங், எல்ஜி, சோனி ஆகிய நிறுவனங்கள் அதிக விலையுடன் அதிக லாபத்தைப் பெற்று வந்த நிலையில் சியோமி மற்றும் டிசிஎல் நிறுவனங்களின் அதிரடியால் ஒட்டுமொத்த டிவி சந்தையும் ஆடிப்போய் உள்ளது.
பல லட்சம்
சாம்சங், எல்ஜி, சோனி போன்ற நிறுவனங்களில் 1 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு விற்கப்படும் அதே டிவி சியோமியில் வெறும் 45,0000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் முன்னணி நிறுவனங்கள் இனி வரும் காலத்தில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்.
போட்டி
இந்தப் போட்டியை சமாளிக்கச் சாம்சங், எல்ஜி, சோனி போன்ற நிறுவனங்கள் தற்போது கண்டிப்பாக விலையைக் குறைக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதேபோன்ற நிலை சியோமி ஸ்மார்ட்போன் சந்தையிலும் உருவாக்கியது. இதனால் சாம்சங் 60000, 70000 ரூபாய்க்கு விற்கப்பட்ட போன்கள் அனைத்தும் தற்போது 40,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தரம்
இதுவரை நாம் சாம்சங், எல்ஜி, சோனி போன்ற நிறுவன தயாரிப்புகளின் தரத்தைப் பார்த்திருப்போம், ஆனால் சியோமி, டிசிஎல் நிறுவனங்களின் தரத்தில் இன்னும் சந்தேகம் இருப்பதால் மக்கள் அதனை உடனடியாக வாங்கத் தயங்குகிறார்கள்.
இந்த பிரச்சனையை சியோமி எப்படி சமாளிக்கப் போகிறது.??