இந்தியன் ஆயில் நிறுவனம் ஈரானில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்து வரும் நிலையில் எஸ்பிஐ வங்கி உதவியுடன் தான் பரிவர்தனை செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க விதித்துள்ள பொருளாதாரத் தடையால் நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஈரான் எண்ணெய் நிறுவனங்களுக்குப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரான் உடன் போட்டிருந்த அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது மட்டும் இல்லாமல் 180 நாட்களில் பொருளாதாரத் தடை விதிக்க இருக்கும் நிலையில் எஸ்பிஐ இந்த முடிவினை எடுத்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள்
எஸ்பிஐ வங்கியின் இந்த முடிவால் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது பாதிக்கப்படும் என்றும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றங்கள் நடைபெறும் என்றும் அதே நேரம் மாற்று வழியில் பணம் செலுத்துவது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் ஆராய்ந்து வருவதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
எண்ணெய் நிறுவனங்கள் எப்படிப் பணத்தினைச் செலுத்துகின்றன?
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ மற்றும் ஜெர்மனியின் யூரோப்பாஷ்-ஈரானிசு ஹேண்டெல்ஸ் பேங்க் மூலமாக ஈரானிய எண்ணெய் வாங்க பணம் செலுத்தி வருகின்றன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்வதைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
இந்தியா
சீனாவிற்கு அடுத்தபடியாக ஈரானில் இருந்து இந்தியா தான் அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் வாடிக்கையாளராக உள்ளது. ஆனால் இப்போது அமெரிக்கா எடுக்க இருக்கும் பொருளாதார நடவடிக்கையால் தற்போது இறக்குமதி பாதிக்கப்பட உள்ளது.
தெற்காசிய நாடுகள்
தெற்காசிய நாடுகள் அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கையினைப் பின்பற்றப் போவதில்லை என்றாலும் அமெரிக்காவில் வர்த்தகம் செய்து வரும் நிறுவனங்கள் வங்கிகளுக்கு அமெரிக்கா அபராதங்களை விதிக்கும்.
பொருளாதாரத் தடை
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள சில பொருளாதாரத் தடைகள் ஆகஸ்ட் 6 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள நிலையில் முழுமையாக நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
ஈரான் இந்தியாவிற்கு அனுப்பும் கச்சா எண்ணெய்க்குப் பணத்தினைச் செலுத்த 60 நாட்கள் வரை கால அவகாசம் அளிக்கும் நிலையில் நவம்பர் மாதம் முதல் ஈரான் எண்ணெய்க்குப் பணத்தினைச் செலுத்த முடியாத நிலைக்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட வாய்ப்புகள் உள்ளது.