பீகாரில் மதுபானங்களுக்குத் தடை விதித்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் மக்கள் எதில் எல்லாம் அதிகம் செலவு செய்கிறார்கள் என்ற ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு மதுவிற்குத் தடை விதித்த பிறகு மக்களின் மன நிலை எப்படி மாறியுள்ளது என்று இந்த ஆய்வு முடிவுகள் பீகார் அரசுக்கு முக்கியம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
புடவைகள் மற்றும் ஆடைகள்
ஏசியன் டெவல்ப்மெண்ட் ரிசர்ச் இன்ஸ்டீட்யூட் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2016-ம் ஆண்டு முதல் பீகார் மக்கள் ஆடம்பர புடவை வாங்குவது 1,751 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதே ஆய்வில் ஆடைகள் வாங்குவதற்காகச் செலவிடுவது 910 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது.
உணவு
பீகார் அரசு நிறுவனம் எடுத்த ஒரு சர்வேயில் 5 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது ஒரு வாரத்திற்கு உணவுக்குச் செலவு செய்யும் சராசரி என்பது 1,005 ரூபாயில் இருந்து 1,331 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
சீஸ்
சீஸ் உணவுக்குச் செலவு செய்வது 200 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், தேனுக்குச் செலவு செய்வது 380 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் ஏசியன் டெவல்ப்மெண்ட் ரிசர்ச் இன்ஸ்டீட்யூட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சேமிப்பு
2016-ம் ஆண்டு வரை குடிப்பழக்கத்திற்காக மக்கள் அதிகம் செலவு செய்து வந்த நிலையில் 2011-ம் ஆண்டு மக்கள் மதுபானத்திற்காகச் செலவு செய்ததுடன் ஒப்பிடும் போது மாதம் 440 ரூபாய் சேமிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சொத்துக்கள்
இரண்டு அறிக்கையிலும் 19 சதவீத மக்கள் சொத்துக்கள் வாங்குவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.