யுபி ஹோல்டிங்ஸ் மற்றும் முடங்கிப்போன கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனங்களின் தலைவரான விஜய் மல்லையா மீது அமலாக்கத் துறை 2வது குற்றப்பத்திரிக்கையைச் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்திய வர்த்தகச் சந்தையில் கொடிக்கட்டி பறந்த விஜய் மல்லையா சுமார் 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் 9,990 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதனை முறைகேடாகப் பயன்படுத்தியது மட்டும் அல்லாமல் தற்போது கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டே வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார்.
இந்நிஸையில் அமலாக்கத்துறை விஜய் மல்லையா மீது புதிய குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
பணசலவை
தற்போது அமலாக்க துறை சமர்ப்பித்துள்ள 2வது குற்றப்பத்திரிக்கையில், முக்கியக் குற்றமாகக் குறிப்பிடுவது பணச் சலவை.
விஜய் மல்லையா தனது கார் பந்தைய அணியான போர்ஸ் இந்தியா பார்மூலா 1 டீம் (லண்டனில் இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது) மற்றும் ஐபிஎல்-இல் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி ஆகியவை வைத்து அவர் பெரிய அளவிலான பணச் சலவையைச் செய்துள்ளார் என அமலாக்க துறை தெரிவித்துள்ளது.
கிங்பிஷர் ஏர்லையன்ஸ்
விஜய் மல்லையாவின் உத்திரவாதம் மற்றும் அவர் தலைமை வகிக்கும் யுபி ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் உத்திரவாதத்தின் பெயரில் சுமார் 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்து கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தை இயக்க சுமார் 6,027 கோடி ரூபாய் அளவிலான கடன் அளிக்கப்பட்டது.
தற்போது இந்தக் கடன் வட்டியுடன் குட்டிப்போட்டு 9,990 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
போலி நிறுவனங்கள்
இந்தக் கடன் தொகையை விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தை இயக்கப் பயன்படுத்தாமல் துபாயில் இவர் கட்டுப்பாட்டில் இருக்கும் பல போலி நிறுவனங்களுக்குப் பரிமாற்றம் செய்து மோசடி செய்துள்ளார்.
அதிகக் கட்டணம்
அதேபோல் வெளிநாட்டில் இருந்து வாடகைக்கு வாங்கப்பட்ட விமானத்திற்குக் கட்டணம் செலுத்தும் பெயரில் அளவிற்கு அதிகமான தொகையைக் கட்டணமாகச் செலுத்தி பல நூறு கோடியை வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார் விஜய் மல்லையா.
போர்ஸ் இந்தியா
இதேபோல் பிரிட்டனில் இருக்கும் போர்ஸ் இந்தியா பார்மூலா அணியைக் கணக்கிற்கு 225 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்து அதை விளம்பரம், விரிவாக்கம் பெயரில் செலவு செய்ததாகக் கணக்குக்காட்டியுள்ளார் மல்லையா.
ஆர்சிபி
இதேபோல் 2008இல் Deutsche Bank மூலம் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு வாங்கப்பட்ட 15.9 கோடி ரூபாய் கடன் ஐபிஎல் கிரிக்கெட் அணியான பெங்களுரூ ஆர்சிபி அணி வங்கி கணக்கிற்குப் பரிமாற்றம் செய்து விஜய் மல்லையா பணச் சலவை செய்துள்ளார்.
இதன் மூலம் ஐபிஎல், போர்ஸ் இந்தியா போன்ற விளையாட்டு நிறுவனங்கள் மூலம் விஜய் மல்லையா பணசலவை செய்துள்ளார்.
900 கோடி கடன்
ஒரு வருடத்திற்கு முன்பு அமலாக்க துறையில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையில் ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் மூலம் முறையற்ற வகையில் கடன் அளிக்கப்பட்டதும், அதனை முறைகேடாகப் பயன்படுத்தியதும் குறித்து விஜய் மல்லையா உடன் 8 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.