மத்திய அரசு அன்மையில் தனியார் நிறுவனங்கள் அல்லது அரசு துறைகளில் பணிபுரியும் 10 நபர்களை லேட்டரல் எண்ட்ரி மூலம் நேரடியாகத் துணை செயலாளர் பணிகளுக்கு எடுக்க இருக்கும் அறிவிப்பினை வெளியிட்டது. தற்போது இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் இரண்டு நபர்களின் ரெபரன்ஸ் பெயர்களைக் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த ரெபரன்ஸ் முறையானது எப்படி ரெஸ்யூம்களில் இரண்டு நபர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுடன் தன்னைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்று குறிப்பிடுவார்களோ அது போன்றதே ஆகும்
ரெபரன்ஸ் முறை
இந்தியாவில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் இந்த ரெபரன்ஸ் முறையினைப் பின்பற்றி வரும் நிலையில் மத்திய அரசும் முதன் முறையாக இந்தப் பின்புல சரிபார்ப்பு முறையினைச் செய்ய உள்ளது.
லேட்டரல் எண்ட்ரி
மத்திய அரசு அமைச்சகங்களில் துணை செயலாளர் பணிக்கு தனியார் ஊழியர்களை லேட்டரல் எண்ட்ரி முறை மூலம் தேர்வு செய்ய இருப்பதாகவும் இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 15 முதல் வழங்கப்படும் என்றும் ஜூன் மாத துவக்கத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தகுதி
இந்தத் துணை செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்குக் குறிப்பிட்ட சில துறைகளில் 15 வருடம் அனுபவம் மற்றும் 40 வயதினை நிரம்பி இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும்.
சுய விவரம்
மேலும் இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 250 வார்த்தைகளில் தான் ஏன் இந்த வேலைக்குப் பொருத்தமானவராக இருப்பேன் என்றும் தற்போது செய்து வரும் வேலையில் செய்த சாதனைகள் மற்றும் அடைந்த இலக்குகள் குறித்தும் அதில் குறிப்பிட வேண்டும் தெரிவித்துள்ளனர்.
தேவைப்படும் திறன்
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் இவர்களைப் பணிக்கு எடுக்கும் போது துறைகள் சார்ந்த கள அறிவு, துறை அனுபவம், செயல்பாட்டுத் திறன் மற்றும் நடத்தைத் திறமைகள் போன்றவற்றில் திருப்தி அடைந்தால் தான் மோடி அரசின் அமைச்சகத்தின் கீழ் பணிபுரிய முடியும்.
சர்ச்சைகள்
துணை செயலாளர் பணிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தான் நியமிக்கப்படுவார்கள். அதனைச் சீர் குழைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதே நேரம் மத்திய அரசு இது ஒரு தற்காலிக வேலை வாய்ப்பு தான். துறை சார்ந்த அனுபவம் உள்ளவர்களைத் தற்காலிகமாகப் பணிக்கு எடுத்துப் பொதுத் துறை நிறுவனங்களில் புதிய வளர்ச்சியினை எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் இந்தப் பணிக்கு எடுக்கப்படுபவர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகளுக்கு அதிகமாகவும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.