இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய்யை ஈரானில் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால் பண பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதில் உள்ள சிக்கலை தீர்க்க வேண்டும் என்பதால் ரூபாய் மதிப்பில் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கலாமா என்று அரசு விவாதித்து வருகிறது.
அணு ஆய்த ஒப்பந்தம்
ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யினை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பொருளாதாரத் தடை
அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள சில தடைகள் வர இருக்கும் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில் கச்சா எண்ணெய் மீதான இறக்குமதிகளுக்கு நவம்பர் 4-ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
கிரெடிட்
ஈரான் இந்தியாவிற்கு 90 நாட்கள் கிரெடிட் அடிப்படையில் கச்சா எண்ணெய் வழங்கி வரும் நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு வாங்கும் போது டாலர் மதிப்பில் பணத்தினைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ரூபாய்
இதற்கான தீர்வுகள் குறித்து ஈரான் மற்றும் இந்திய அரசு தரப்பு விவாதித்து வரும் நிலையில் ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பு வட்டாரங்களில் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
எஸ்பிஐ
இந்தியன் ஆயில் நிறுவனம் ஈரானில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்து வரும் நிலையில் எஸ்பிஐ வங்கி உதவியுடன் தான் பரிவர்தனை செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க விதித்துள்ள பொருளாதாரத் தடையால் நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஈரான் எண்ணெய் நிறுவனங்களுக்குப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.