உலகமே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பெட்ரோல், டீசல் கார்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து விட்டு எலக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்த தீர்மானித்துக் கொண்டு இருக்கும் போது, மோடி தலைமையிலான அரசு எலக்ட்ரிக் கார்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
மானியம் ரத்து...
மத்திய அரசு தற்போது எடுத்துள்ள முடிவின் பிடி, தனிநபர் வாங்கும் எலக்ட்ரிக் கார்களுக்கான மானியத்தை முழுமையாக ரத்து செய்துள்ளது.
இதனால் சதாராண மக்கள் எலக்ட்ரிக் கார்களை வாங்க, அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வழங்கப்பட்ட மானியம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அவர்களைப் பெட்ரோல், டீசல் கார்களை வாங்கத் தள்ளுகிறது. இந்த மானிய ரத்து தனிநபர்களுக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் மாற்று யோசனை
இனி மத்திய அரசு தனிநபர்களுக்கு அளிக்கப்படும் எலக்ட்ரிக் கார்களுக்கான மானியத்தை நிறுத்திவிட்டு, ஓலா, உபர் போன்ற பகிர்வு போக்குவரத்து சேவையை அளிக்கும் நிறுவனங்கள் பயன்படுத்தும் எலக்ட்ரிக் கார்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
ஏனென்றால் தனிநபர்கள் எலக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்துவதை விடவும் இந்தத் தனியார் ஓலா, உபர் நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்துகிறது எனக் காரணத்தைக் கூறியுள்ளது.
1.3 லட்சம் ரூபாய்
மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டமான FAME கீழ் தனிநபர்கள் வாங்கும் எலக்ட்ரிக் கார்களுக்கு 1.3 லட்சம் ரூபாய் அளவிலான மானியம் வழங்கப்படுகிறது.
இந்த மானிய தொகையைத் தான் FAME திட்டத்தின் 2வது பகுதி திட்டத்தில் நீக்கப்பட்டுள்ளதாகக் கனரகத் தொழில்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பட்ஜெட் தொகை அதிகரிப்பு
FAME திட்டத்தின் முதல் பகுதியில் தனிநபர்களுக்கு அளிக்கப்படும் மானியத்திற்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகை 1000 கோடி ரூபாய். தற்போது 2வது பகுதி திட்டத்தில் அதாவது ஓலா, உபர் நிறுவனங்களுக்கு மானியம் அளிப்பதற்காகச் சுமார் 9,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
எலக்ட்ரிக் கார்கள் திறம்படப் பயன்படுத்த வேண்டும் என்றால் பொதுப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்த வேண்டும்.
எலக்ட்ரிக் பஸ்
அதேபோல் எலக்ட்ரிக் பஸ்களை வாங்குவோருக்கு 60 சதவீத தொகை மானியமாக வழங்கப்பட்ட நிலையில் தற்போது இதனுடைய மானிய தொகையும் 40 சதவீதமாகக் குறைத்துள்ளது மத்திய அரசு
2017 விற்பனை
2017ஆம் ஆண்டில் இந்தியாவில் 32 லட்சம் பெட்ரோல், டிசல், சிஎன்ஜி கார்கள் விற்பனை ஆன நிலையில், வெறும் 1,500 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.
தற்போது மத்திய அரசின் முடிவுகளால் இத்துறையில் ஏற்பட உள்ள மாற்றத்தையும் தடுக்கும் வகையில் இந்த மானிய ரத்துத் திகழ்கிறது.
2030 இலக்கு
இந்நிலையில் மத்திய அரசு 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்து கார்களும் எலக்ட்ரிக் கார்களாக மாற வேண்டும். இது மட்டும் அல்லாமல் இக்காலகட்டத்திற்கு இந்தியாவில் இருக்கும் அனைத்துக் கார் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை மட்டுமே தயாரிக்கும் நிறுவனமாக மாற வேண்டும் என மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் சாலை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நித்தின் கட்கரியும் கூறியதாக டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.