இந்திய முதலீட்டாளர்கள் மட்டும் இல்லாமல் அன்னிய முதலீட்டாளர்களும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோவின் பங்குச்சந்தை பட்டியலிடப்படுவதை எதிர்நோக்கிய காத்துக்கொண்டு இருக்கிறது.
முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் சேவை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இப்பிரிவைத் தனியாகப் பிரித்துப் பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது.
ஜியோ
ஆரம்பக்கட்டத்திலேயே ஜியோ நிறுவனத்தைப் பட்டியலிடுவது சரியானதாக இருக்காது என்பது முன்னணி பங்குச்சந்தை நிபுணர்களின் கருத்தாக இருந்தது.
ஆயினும் பலர் இந்நிறுவனத்தின் மூலம் ரிலையன்ஸ் குழுமத்தின் மீதான நம்பிக்கையினால் ஜியோ பங்குச்சந்தைக்கு வரலாம் எனக் கூறிவந்தனர். இத்தகைய குழுப்பமான நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
முக்கிய முடிவு
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஜியோவை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடும் திட்டம் உடனடியாகச் செயல்படுத்த முடியாது. அடுத்த 2 அல்லது 3 வருடங்களில் செய்வோம் என இக்கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
வருவாய்
மேலும் இக்கூட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் கிடைக்கும் வருவாய், ரீடைல் வர்த்தகத்தில் (ஜியோவையும் சேர்த்து) கிடைக்கும் போதும் ஜியோ மற்றும் ரீடைல் பிரிவை தனியாகப் பிரித்துப் பங்குச்சந்தையில் பட்டியலிடலாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
கேபிள் டிவி
மேலும் ஜியோவின் அதிரடி வளர்ச்சியால் அதன் வாடிக்கையாளர்களில் 75 சதவீதம் பேர் ஜியோ டிவி செயலியை அதிகளவில் பயன்படுத்தும் காரணமாக அடுத்த 5 -10 ஆண்டுகளில் இந்தியாவில் கேபிள் டிவி என்பதே இருக்காது என ஆய்வுகள் கூறுகிறது.
டேட்டா பயன்பாடு
ஜியோ அறிமுகத்திற்குப் பின் இந்தியாவில் இருக்கும் டெலிகாம் வாடிக்கையாளர்களின் சராசரி தினசரி டேட்டா பயன்பாட்டு அளவு வெறும் 35எம்பியாக இருந்த நிலையில், தற்போது 1.8 ஜிபியாக உயர்ந்துள்ளது.
இவை அனைத்தும் ஜியோவின் மலிவான சேவை அறிமுகத்திற்குப் பின் நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.