மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மாநில முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தடை செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இம்மாநிலத்தில் இனி கேரி பேக், தெர்மாகோல் என எதையும் பயன்படுத்த முடியாது.
தேவேந்திர பட்னாவிஸ் அவர்களின் உத்தரவால் மும்பையை மையமாகக் கொண்டு இருக்கும் பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலைகள் முழுமையாக முடங்க உள்ளது.
பாதிப்பு
மகாராஷ்டிரா அரசின் உத்தரவால் மும்பையை மையமாகக் கொண்டு இருக்கும் பல பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலைகள் முடங்கும். இதனால் 15,000 கோடி ரூபாய் வர்த்தகம் முழுமையாகப் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் 3 லட்ச வேலைவாய்ப்புகளும் பாதிக்கிறது எனப் பிளாடிக் பை உற்பத்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
வெளியேற்றம்
இதுமட்டும் அல்லாமல் பிளாடிக் பை உற்பத்தியாளர்கள் அமைப்பில் இருந்து சுமார் 2,500 பேர் இந்தத் தடையால் வெளியேறியுள்ளனர். அவர்களுக்கு வேறு வழியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 23
மகாராஷ்டிரா அரசு மார்ச் 23ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இனி மாநிலத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பேக், ஸ்பூன், பிளேட், PET மற்றும் PETE பாட்டில், தெர்மாகோல் பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ, விநியோகம் செய்யவோ, சேமிக்கவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
3 மாதம்
இதை முழுமையாக அமல்படுத்த மகாராஷ்டிரா அரசு 3 மாதம் அவகாசம் கொடுத்த நிலையில் ஜூன் 23 உடன் இந்தக் காலக்கெடு முடிவடைந்தது. தற்போது பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாகப் புழக்கத்தில் இருந்து நீக்கும் பணிகளைச் செய்து வருகிறது.
அபராதம்
இதைக் கடைப்பிடிக்காமல் இருக்கும் மக்கள் முதல் முறை தண்டனையாக 5,000 ரூபாய் அபராதமும், 2வது தண்டனைப் பெறுபவர்கள் மீது 10,000 ரூபாயும், 3வது முறை தண்டனை பெறுபவர்கள் மீது 25,000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாத சிறை தண்டனையும் அளிக்கப்படும் என இம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.