தெலுங்கான அரசு உலகின் சிறந்த நீர் பாசன முறையான லிப்ட் இரிகேஷன் என்பதைத் தங்களது மாநிலத்தில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிகளவில் விவசாயிகள் இறக்கும் மாநிலமாகத் தெலுங்கானா இருக்கும் நிலையில் அவர்களைக் காப்பாற்ற பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பயிற் செய்ய மானியம்
அன்மையில் 2 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் பயிற் செய்ய ஆண்டுக்கு 8,000 ரூபாய் மானியம் பெறலாம் என்ற திட்டத்தினைச் செயல்படுத்தியதை அடுத்து 80,000 கோடி ரூபாய் செலவில் தெலுங்கானா அரசு இந்த நீர்ப்பாசன திட்டத்தினைச் செயல்படுத்தி வருகிறது.
உலகின் மிகப் பெரிய நீர்ப் பாசன திட்டம்
உலகின் மிகப் பெரிய நீர்ப்பாசன திட்டமாக இந்தக் காலேஷ்வரம் பசன திட்டம் இருக்கும் என்றும் முதல்வர் கே சந்திரசேகர ராவுக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்று தரும் என்றும் தனது அனைத்துத் தேர்தல் வாக்குறுதிகளைத் திறம்படச் செயல்படுத்தி வருகிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. எனவே இந்தக் காலேஷ்வரம் நீர்ப்பாசன திட்டம் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
நிதி ஒதுக்கீடு
காலேஷ்வரம் நீர்ப்பாசன திட்டம் தான் இந்தியாவின் மிகப் பெரிய நீர் பாசன திட்டம் ஆகும். இதற்காக எந்த ஒரு மாநிலமும் செய்யாத அளவில் 80,000 கோடி ரூபாயினைத் தெலுங்கானா அரசு செலவு செய்ய உள்ளது.
விவசாயம் பயன்பெறும்
காலேஷ்வரம் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் முதலில் 13 மாவட்டங்களின் 18 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெற உள்ளன. இதன் அடுத்தக் கட்டமாகக் கூடுதல் 7 மாநிலங்களில் இருந்து 17 ஏக்கர் விளை நிலங்களுக்குப் பாசன நீர் கிடைக்கும் வசதியினையும் ஏற்படுத்திக் கொடுக்கத் தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
குடிநீர் சிக்கல் தீரும்
காலேஷ்வரம் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் ஹைதராபாத், செக்கேந்தராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் குடிநீர் தட்டுப்பாடு இன்றிப் பெறவும் வசதி செய்யப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் நகர மக்கள் மட்டும் இல்லாமல் பல தொழிற்சாலைகளுக்கு இந்தத் திட்டம் கீழ் நீர் வழங்கப்பட உள்ளது.
நீர் ஆதாரம்
கோதாவரி மற்றும் பிற மூன்று ஆறுகளில் இருந்து திட்டத்திற்காக நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரிவர்ஸ் பம்ப் முறை மூலம் நீரை ஆற்றில் இருந்து எடுத்து பாசனத்திற்காக அனுப்பப்பட உள்ளது.
சேமிக்கப்பட இருக்கும் தண்ணீர்
காலேஷ்வரம் நீர்ப்பாசன திட்டத்ன் மூலம் 13 மாவட்டங்களில் 20 நீர்த்தேக்கங்களில் 145 டிஎம்சி தண்ணீரைத் தேக்க முடிவு செய்துள்ளனர். அனைத்து நீர்த்தேக்கங்களும் குழாய் மூலம் இணைக்கப்படும். இதற்காக மட்டும் 330 கிலோ மீட்டர் தொலைவிற்குக் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் நாடு
இதே போன்று தமிழகத்தில் காவிரி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இருக்கும் போதிலும் அதனைப் பயன்படுத்தி ஏரி மட்டும் குட்டைகளில் நீர் சேமிக்கப்படுவதில்லை. விவசாயக் கால்வாய்கள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.