சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம், இந்திய இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் மத்தியில் உருவாகியுள்ள அதிகளவிலான டாலர் தேவை ஆகியவற்றின் காரணமாக, இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.10 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ப்யூச்சர் சந்தையைக் குறி வைத்து தனது பணிகளைத் துவங்க உள்ளது. ஆர்பிஐ அப்படி என்ன செய்யப்போகிறது.
ரிசர்வ் வங்கி
பொதுவாக இந்திய சந்தையில் ரூபாய் மதிப்பின் மாற்றங்களைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி ஸ்பாட் சந்தையில் தலையிட்டு அதனைச் சரிக்கட்ட முயற்சி செய்யும். இதன் மூலம் ரூபாய் மதிப்பை உயர்த்தவும், குறைக்கவும் ரிசர்வ் வங்கியால் முடியும்.
ரூபாயின் புழக்கம், வங்கித்துறையில் பண இருப்பு ஆகியவை நாட்டின் பணவீக்கம் மற்றும் பத்திர லாபத்தைக் கட்டுப்படுத்தும் இரு முக்கியக் கருவியாகும். ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையும் இதன் அடிப்படையில் தான் இயங்குகிறது.
பத்திர லாபம்
கடந்த சில மாதங்களாகவே இந்திய பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாப அளவீடுகள் அதிகரித்து வருவதால் கடன் விகிதம் தற்போது 8% உயர்ந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பத்திர முதலீட்டின் லாபத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி ஒப்பன் மார்கெட் ஆப்ரேஷன்ஸ் (OMO) பணிகளைத் துவங்கும்.
OMO பணிகள்
தற்போது இருக்கும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி பத்திரங்களைப் பெற்றுச் சந்தையில் புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்க ரூபாய் பத்திரங்களை விற்பனை செய்தும், டாலர் பத்திரங்களை வாங்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் இந்தத் தலையீடு ப்யூச்சர் சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா
இந்தியா ரூபாய் போலவே சீனாவின் யூவான் மதிப்பும் அமெரிக்கா டாலருக்கு எதிராக அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் சீனாவும் முக்கிய மாற்றங்களைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத்தேர்தல்
இந்தியாவில் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் இந்நிலையில் வரலாறு காணாத இந்திய ரூபாயின் சரிவு பெரிய அளவிலான பாதிப்பை மோடி அரசுக்கு உருவாக்கியுள்ளது.
இந்திய வர்த்தகச் சந்தை நிலை தொடர்ந்து இதே போல இருந்தால் அடுத்தச் சில வாரங்களில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.50ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.