நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் 2வது இடத்தில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கி தற்போது பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது, இதில் குறிப்பாகச் சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்கு அளித்த கடன் முறைகேடு, சில வாடிக்கையாளர்களிடம் மட்டும் தவறாக நடந்துகொள்ளுவதாகச் சந்தா கோச்சார் மீதான குற்றச்சாட்டு, புதிய சிஇஓவை தேடும் பணியில் ஐசிஐசிஐ நிர்வாகம், அனைத்தையும் தாண்டி தொடர்ந்து உயர்ந்து வரும் வராக்கடன் பிரச்சனை ஆகிவை இவ்வங்கியை ஆட்டிவைக்கிறது.
அனைத்திற்கும் உச்சமாக ஐசிஐசிஐ வங்கி கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 19,000 கோடி ரூபாயைச் சந்தை மதிப்பீட்டில் இழந்துள்ளது.
பங்குச்சந்தை
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 2.8 சதவீதம் சரிந்து 3 மாத சரிவை பதிவு செய்தது, புதன்கிழமை வர்த்தகத்திலும் 2.8 சதவீதம் சரிந்த ஐசிஐசிஐ கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 11 சதவீதம் சரிந்து முதலீட்டாளர்களைச் சோகத்தில் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
4 நாட்கள்
இந்த வாரத்தின் 4 நாள் வர்த்தகத்தில் மட்டும் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சுமார் 11 சதவீதம் வரை சரிந்ததன் மூலம் இவ்வங்கியின் சந்தை மதிப்பீட்டு 19,066.46 கோடி ரூபாய் வரையில் சரிந்தது.
ஐசிஐசிஐ வங்கியின் தாக்கம் தனியார் வங்கித் துறையில் கணிசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
செபி
மேலும் சந்தா கோச்சார் தலைமையில் ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்திற்கு அளித்த கடனில் அவர் செய்த முறைகேடுகள் குறித்த கார்ப்பரேட் கவர்னஸ் அறிக்கையைச் செபி, ஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்திடம் கேட்டுள்ளது.
புதிய சிஇஓ
இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் தேடும் பணிகள் வேகமாக நடந்தி வருகிறது.
ஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தில் புதிதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரைக் சேர்க்க உள்ளது இவ்வங்கி நிர்வாகம்.