இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. தற்போது ஒரு வருடம் முடிவடைந்த பிறகும் அதில் பல மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது. இன்னும் பல சிக்கல்கள் ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் கடந்த ஒரு வருடத்தில் என்னவெல்லாம் வெற்றி, தோல்வி போன்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
உயராத பணவீக்கம்
ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என்று விமர்சிக்கப்பட்ட நிலையில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழவில்லை. அன்மையில் ஏற்பட்ட பண வீக்கம் கூட பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களுக்காகத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பல அடுக்கு வரி கட்டமைப்பு
ஒரே நாடு ஒரே வரி என்று கூறிய நிலையில் எதற்கு 4 வகையான வரி விகிதங்கள் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் அதனால் தான் முன்பு இருந்து வரி முறைக்கு இணையான வரி வசூல் கிடைத்து வருகிறது. வணிகங்களுக்கும் அரசுக்கும் பெரிதாக பாதிப்புகளும் இல்லாமல் உள்ளது.
ஒரே தேசிய சந்தை
ஜிஎஸ்டி வந்த பிறகு ஒரே தேசிய சந்தையாக மாறிய நிலையில் மாநில எல்லைகளில் லாரிகள், டிரக்குகள் எல்லாம் வரிசையில் நிற்பது குறைந்தது. ஜிஎஸ்டி வந்த பிற பிற துறைகளுடன் ஒப்பிடும் போது லாஜிஸ்டிக்ஸ் துறை மிகப்பெரிய அளவில் பயன்பெற்றுள்ளது.
தேசம் முழுவதும் ஒரே வரி
எந்தப் பொருளை வாங்கினாலும் கன்னியாகுமரியில் என்ன வரியோ அதே தான் காஷ்மீரிலும் என்ற நிலை வந்தது.
வெளிப்படைத்தன்மை
ஜிஎஸ்டி வந்த பிறகு இரு நிறுவனம் விற்ற பொருளை மற்றொருவர் வாங்கும் போது அதில் உள்ள வெளிப்படைத்தன்மையினை உறுதி செய்தது மட்டும் இல்லாமல் வரி செலுத்துனர்கள் அதிகரித்துள்ளனர். ஜிஎஸ்டி கீழ் 10 மில்லியனுக்கு அதிகமாக நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒரு பொருளை உற்பத்தி செய்வது முதல் கடைசியில் வாடிக்கையாளர் வாங்கும் வரை அனைத்துக் கணக்குகளும் வெளிப்படைத் தன்மையாக மாறியுள்ளது.
எல்லோருக்கும் வெற்றி
ஜிஎஸ்டிக்கு முன்பு இருந்த 17 வரிகள் மற்றும் பல செஸ்கள் எல்லாம் ஒரே வரியாக ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரப்பட்டது. இதில் மத்திய அரசின் கலால் வரி, சேவை வரி, மாநில வரி, வாட் வரி போன்றவையும் அடங்கும். ஜிஎஸ்டிக்கு முன்பு இருந்த வரிக்கு வரி என்ற நிலை மாறி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன்பெற வழிவகை செய்யப்பட்டது. நாடு முழுவதும் அனைவருக்கு ஒரே மாதிரியான வரி விதிமுறைகள். அரசுக்கு வரி வருவாய் சரிந்தாலும் இணக்கம் அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டிஎன் தளம்
ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் தளமான ஜிஎஸ்டிஎன் ஒரு வருடமாகப் பல முறை செயல் இழந்து வரி தாக்கலுக்காக காலக்கெடு நீட்டிப்புகள் வழங்கப்பட்டுள்ளது மட்டும் இல்லாமல் தொடர்ந்த அவ்வப்போது செயல் இழப்பு என்பது நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கிறது. இதற்காக புதிய வரி தாக்கல் முறை எல்லாம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பதிவு செய்தல்
ஒரு நிறுவனத்திற்குப் பல பதிவு செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. பல நேரங்களில் அனைத்து மாநிலங்களிலும் நிறுவனத்தினை பதிவு செய்ய வேண்டும், ஒரு நிறுவனத்திற்குப் பல இடங்களில் பதிவு செய்வது என்பது சிரமம் என்று நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செஸ் வரிகள்
ஜிஎஸ்டி வரி முறை வந்த பிறகு பல வரிகள் குறைந்தாலும் புதிதாக ஆடம்பர பொருட்கள் மீது இழப்பீடு செஸ் வரி மற்றும் சர்க்கரை மீது புதிய செஸ் போன்றவையும் வந்துள்ளன.
ஏற்றுமதியாளர்கள் ரீஃபண்டு
ஏற்றுமதி செய்யும் முன்பு வர்த்தகர்கள் செலுத்தும் கூடுதல் உள்ளீட்டு வரியினை திரும்ப அளிப்பதில் ஏற்பட்ட தாமத்தினால் பல வணிகங்கள் பாதிக்கப்பட்டன. அதற்காகப் பல நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது தான் ஓர் அளவிற்கு நிலமை சீர் அடைந்து வருகிறது.
ஜிஎஸ்டி தாக்கல் எளிமைப்படுத்தல்
ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் போது படிவங்களில் நிறையச் சிக்கல் உள்ளதால் அதனைக் குறைக்கும் படி படிவங்களில் புதிய மாற்றங்களை விரைவில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரி தாக்கல் எண்ணிக்கை குறைப்பு
ஆண்டுக்கு 30 முறைக்கும் அதிகமாக ஜிஎஸ்டி தாக்கல் செய்ய வேண்டும் என்ற முறை குறைக்கப்பட்டு 12 முறை செய்தால் மட்டும் போதும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இப்படி ஜிஎஸ்டி அமலுக்கு வந்த கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு வடிவில் மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் அது எப்போது முடிவடையும் அனைத்தும் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருக்கும் என்பது மட்டும் தெரியவில்லை.