ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பொதுத் துறை நிறுவனமான ஐடிபிஐ வங்கியில் முதலீடு செய்ய உள்ள நிலையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்ஐசி நிறுவனமானது கடந்த 2.5 ஆண்டுகளில் 21 பொதுத் துறை நிறுவனங்களில் அதிகப்படியாக முதலீடுகளைக் குவித்துள்ள நிலையில் அதில் 18 நிறுவனங்கள் நட்டத்தை மட்டுமே அளித்துள்ளன.
எல்ஐசி-க்கு அனைத்துப் பொதுத் துறை வங்கி நிறுவனங்களிலும் 1 சதவீதத்திற்கு அதிகமான முதலீடுகள் உள்ளன. அதில் 3 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே 2015 டிசம்பருக்குப் பிறகு அதிக விலையில் உள்ளன.
லாபம் அளித்த வங்கி நிறுவனங்கள்
எல்ஐசி முதலீடு செய்து லாபம் அளித்து வரும் அந்த மூன்று வங்கி நிறுவனங்கள் இந்தியன் வங்கி, விஜயா வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ). 2015 டிசம்பர் முதல் 2018 மார்ச் வரை பொதுத் துறை வங்கி நிறுவனப் பங்குகள் 8 சதவீத வரை சரிந்துள்ளன.
அதிகளவில் மதிப்பு சரிந்த வங்கிகள்
பொதுத் துறை வங்கி நிறுவனங்களில் எல்ஐசி அதிகளவில் முதலீடு செய்து வரும் நிலையில் ஆர்பிஐ அனைத்து வங்கி நிறுவனங்களிடமும் சொத்தின் தரம், வாரா கடன் மற்றும் மதிப்பினை கேட்டு ஆய்வு செய்து வருகிறது. அப்போது இருந்து தேனா வங்கி, யூகோ வங்கி மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கிகள் 60 சதவீதம் வரை மதிப்பினை இழந்துள்ளன.
தனியார் வங்கி நிறுவனங்கள்
பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் நட்டம் அளித்து வரும் அதே நேரம் தனியார் வங்கி நிறுவனங்களில் செய்துள்ள முதலீடு 50 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தினை அளித்துள்ளது. எச்டிஎப்சி வங்கி பங்குகள் 50%, யெஸ் வங்கி பங்குகள் 134 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது.
எல்ஐசி முதலீட்டை அதிகம் வைத்துள்ள வங்கிகள்
எல்ஐசியிடம் பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் 14.2 சதவீதமும், கார்ப்ரேஷன் வங்கியின் 13 சதவீதமும் அலகாபாத் வங்கியின் 10 சதவீதமும், ஐடிபிஐ, சிண்டிகேட் மற்றும் செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் 10 சதவீத பங்குகளும் உள்ளது.
எல்ஐசி-ஐடிபிஐ
தற்போது எல்ஐசி ஐடிபிஐ வங்கியில் 11,000 கோடிக்கும் கூடுதலாக முதலீடு செய்ய உள்ள நிலையில் அதனால் ஒரு பைசா கூட லாபம் கிடைக்கப் போவதில்லை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். வாரா கடனில் சிக்கி தவித்து வரும் பொதுத் துறை வங்கிகளைக் காப்பாற்றும் நோக்கத்தில் எல்ஐசி-ஐ மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இதில் முதலீடு செய்தவர்களின் பணத்திற்கு யார் பொறுப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அருண் ஜேட்லி
சென்ற ஆண்டு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பாராளுமன்றத்தில் ஐடிபிஐ வங்கியினைக் கைமாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அரசின் பங்குகள் 50 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசுக்குத் தற்போது 81 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள்
ஒரு வேலை ஐடிபிஐ வங்கி பங்குகளை எல்ஐசி வாங்கினால் அரசுக்கு அது பெரும் ஆதாயம் என்றாலும் பாலிசிதாரர்களின் பணம் என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.