ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்களுடன் தொடர்ந்து போட்டி போட்டு வரும் ஜியோ தற்போது ஒரு படிக்கு மேல் சென்று நாட்டில் குறைவான தொலைத்தொடர்பு இணைப்புக் கொண்ட கிராமங்கள், 2வது 3வது தர நகரங்களைக் குறிவைத்து, இப்பகுதியில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிப்பதற்காகவே புதிய சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ தெரிவித்துள்ளது.
இதுதான் பிரச்சனை..!
ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்குத் தற்போது இலவச வாய்ஸ் கால் சேவையை அளிப்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் கிராமங்களில், சிறிய நகரங்களில் இருக்கும் மக்களுக்குச் சரியான இணைப்புக் கிடைக்காமல் இருப்பதால் அதிகளவிலான இணைப்புத் துண்டிப்பு, கால் ரத்து ஆகியவற்றைச் சந்தித்து வருகின்றனர்.
இதே போன்ற பிரச்சனை பெரு நகரங்களிலும் இருப்பதை நாம் மறுக்க முடியாது.
பிரச்சனைக்கான தீர்வு
கிராமங்களில் இருக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் சந்திக்கும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக வைபை (WiFi) மூலம் வாய்ஸ் கால் செய்யும் சேவையை ஜியோ 4ஜி ப்யூச்சர் போனில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
பயன்
இந்தச் சேவையைக் கிராம மக்கள் அதிகம் பயன்படுத்தும் பியூச்சர் போன்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் பொது வைபை நெட்வொர்க் மூலம் இண்டர்நெட் இணைப்பைப் பெற்று இண்டர்நெட் வழியாக மொபைல் நம்பர், லேண்டு லைன் எண்ணிற்கும் கால் செய்ய முடியும்.
இணைப்புப் பிரச்சனை
மேலும் தொலைத்தொடர்பு பிரச்சனை இருக்கும் கிராமங்கள், அகலமான சுவர்கள் கொண்ட வீடுகளில் இருக்கும் இணைப்புப் பிரச்சனை, நிலத்திற்குக் கீழ் இருக்கும் அறையில் உள்ள இணைப்புப் பிரச்சனை, பஸ் ஸ்டான்டு, மெட்ரோ போன் பொது இடங்களில் இருக்கும் இணைப்பு பிரச்சனைகளை எளிதாகத் தீர்க்க முடியும்.
இந்திய அரசு
மத்திய அரசு Public Open WiFi என்னும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருக்கும் கிராமங்கள், 2வது, 3வது தர நகரங்களுக்கு மிகவும் மலிவான விலையில் இண்டர்நெட் இணைப்பு வழங்கி இந்தியா முழுவதும் வைபை எகோசிஸ்டம்-ஐ உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
அடுத்தச் சில மாதங்கள்..
இத்திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு அமைச்சகம் இந்தியாவில் 10,000 வைபை ஹாட்ஸ்பாட்-ஐ அடுத்த மாதம் நிறுவ உள்ளது, இதன் எண்ணிக்கை அடுத்த 3 மாதத்தில் 1,00,000 வைபை ஹாட்ஸ்பாட்களை நிறுவ வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதன் மூலம் 2019ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 4 கோடி பேர் பொது வைபை திட்டத்தின் கீழ் இணைப்பை பெறுவார்கள் என ஆய்வுகள் கூறுகிறது.
முதற்கட்ட சேவை
ஜியோ அறிமுகம் செய்ய உள்ள இத்திட்டத்தில் முதற்கட்டமாக ஜியோ டூ ஜியோ கால் சேவையை மட்டுமே அறிமுகம் செய்ய உள்ளது. பின்னர்ப் பிற நெட்வொர் வாடிக்கையாளர்களுக்கு இணைப்ப தர திட்டமிட்டுள்ளது.
ஜியோபோன் வாடிக்கையாளர்கள்
முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ அறிமுகம் செய்த 4ஜி ஜியோ பியூச்சர்போன் மற்றும் அதில் அளிக்கப்படும் சேவைகள் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனால் ஜியோபோன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மட்டும் 96.3 லட்சம் இதில் 39 லட்சம் பேர் கிராம மக்களுடையது.
ஜியோ வாடிக்கையாளர்கள்
பொது மக்களுக்கான சேவையைச் செப்டம்பர் 2016இல் ஜியோ துவங்கி வெறும் 2 வருடம் மட்டுமே ஆன நிலையில் இந்நிறுவனத்தில் தற்போது சுமார் 20 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
மேலும் இந்தியாவில் தற்போது 50 கோடி பியூச்சர் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
50 சதவீத சந்தை
ஜியோ இதே வேகத்தில் சென்றால் அடுத்தச் சில வருடத்தில் இந்திய டெலிகாம் சந்தையில் 50 சதவீத வர்த்தகத்தை ஜியோ கைப்பற்றும் எனத் தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆதிக்க விளையாட்டைச் சக போட்டி நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது தான் தற்போதைய கேள்வி.