இந்திய வர்த்தகச் சந்தை முழுவதும் நேற்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அறிவித்த அறிவிப்புகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள், தாக்கத்தை மட்டுமே ஆய்வு செய்து வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் முகேஷ் அம்பானி அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரிலையன்ஸ் சாம்ராஜியம் என்ன செய்யப்போகிறது என்ற திட்டத்தையும் அறிவித்துச் சந்தையின் முன்னணி நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவித்த திட்டங்கள் என்ன..? அதன் மூலம் யாருக்குப் பாதிப்பு என்பதையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
ஆன்லைன் - ஆப்லைன்
ஜியோ மூலம் ஆப்லைன் ரீடைல் வர்த்தகத்தை ஆன்லைன் உலகுடன் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் மருத்தகம், சிறு வியாபாரிகள், ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தக எனப் பல தரப்பு வர்த்தகத்தையும் ஜியோவின் வாயிலாக இணைக்க உள்ளது. இதன் மூலம் சமானிய வாடிக்கையாளர்கள், சிறு வியாபாரிகள், பெரு ரீடைல் நிறுவனங்கள் வரையில் அனைவரையும் ஒன்றிணைக்கப்படும்.
ஜியோ ஜிகாபைபர்
ஏற்கனவே டெலிகாம் சேவையிலும், மொபைல் டேட்டா சேவையிலும் பெரிய அளவிலான புரட்சியைச் செய்த ஜியோ தற்போது பிராண்ட்பேன்ட் சேவையில் இறங்கியுள்ளது.
இந்தியாவில் இருக்கும் 1000த்திற்கும் அதிகமாக இருக்கும் நகரங்களில் பிராண்ட்பேன்ட் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஆகையால் இத்துறையில் இறங்கிய ஜியோ, தற்போது Mbps வேகத்தில் கிடைக்கும் இண்டர்நெட்-ஐ Gbps வேகத்தில் அளிக்க முடிவு செய்துள்ளது.
டிவி சேவை
ஜியோ ஜிகாபைபர் உடன் ரிலையன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு டிடிஹெச் சேவையும் அளிக்க முடிவு செய்துள்ளது. ஆகையால் இண்டர்நெட் சேவையும் இணைப்புச் சேவையாக டிவி சேவையும் அளிக்க உள்ளது.
இதனால் டிடிஹெச் மற்றும் பிராண்ட்பேன்ட் சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தைச் சந்திக்க உள்ளது.
விவசாயம்
பெட்ரோல் சுத்திகரிப்பு, உற்பத்தி, கெமிக்கல் ஆகிய துறையில் மட்டும் இருந்து வந்த ரிலையன்ஸ் கடந்த சில வருடங்களாகப் புதிய வர்த்தகத் துறையில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயம் துறையிலும் ரிலையன்ஸ் தற்போது தனிப்பட்ட தளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
இதில் நீர் பாதுகாப்பு, மண் மேலாண்மை, துல்லியமான விவசாயம், கழிவு குறைப்பு ஆகியவற்றுக்குத் தொழில்நுட்ப சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது.
கல்வி மற்றும் மருத்துவம்
இதுமட்டும் அல்லாமல் கல்வி துறையில் மேம்பட்ட கல்வி சேவையைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப் பல்வேறு டிஜிட்டல் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது ரிலையன்ஸ்
அதேபோல் மருத்துவத் துறையிலும் மேம்படுட்ட சேவையை அளிக்க ஹெல்த்கேர் பிளாட்பார்ம் அமைக்க உள்ளது.
டேட்டா வாயிலான வர்த்தகம்
மொபைல் இண்டர்நெட் டேட்டா துறையில் அதகளப்படுத்திய ஜியோ தற்போது பிராண்ட் பேண்ட் சேவையில் இறங்கியுள்ளது. இதனை அடித்தளமாக வைத்துக் கன்டென்ட் வாயிலாக வர்த்தகம் செய்யும் முயற்சியில் படிப்படியாகத் தனது திட்டத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
முக்கிய நிறுவனங்கள்
ஆன்லைன் - ஆப்லைன் ரீடைல் சந்தையை ஜியோ மூலம் இணைப்பதன் மூலம் பிளிப்கார்ட், அமேசான், பிக் பேஸ்கட் மற்றும் பிற ஈகாமர்ஸ் நிறுவனங்களும் பாதிக்கப்படும்.
இதேபோல் சிறு கடைகளுக்கும் இத்திட்டத்தில் சேவை அளிக்கும் காரணமாக மெட்ரோ, டிமார்ட், மோர் மெகாஸ்டோர், பிக் பஜார் போன்ற ரீடைல் நிறுவனங்களும் பாதிக்கப்படும்.
பிற துறைகள்
மேலும் மருத்துவத் துறையில் பிராக்டோ, கல்வி துறையில் பைஜூஸ், கோர்ஸ்ரா போன்ற நிறுவனங்களும் கடுமையான போட்டியை சந்திக்க உள்ளது.
அமேசானுக்குச் சவால்..!
இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுனத்தில் வால்மார்டும், அமேசானும் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில் ஜியோ மாறுப்பட்ட முறையில் மக்களை நேரடியாகச் சென்று வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஜியோ-வின் பார்த் திட்டம் அமேசானுக்குப் பெரிய சவாலாகவே இருக்கும்.
பிராட்பேண்ட் சேவை
இதேபோல் பிராட்பேண்ட் சேவை அளிக்கும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் ஜியோவின் வருகையால் வர்த்தகத்தை இழப்பது மட்டும் அல்லாமல் சில நிறுவனங்கள் மூடவும் செய்யலாம். இல்லையெனில் சிறு நிறுவனங்களை ஜியோ வாங்கலாம்.