ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41வது ஆண்டுப் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில் அதன் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆண்டுப் பொதுக் கூட்டம் முடிவடைந்த பின் வியாழக்கிழமை சந்தை நேர முடிவில் 2.6 சதவீதம் வரை சரிந்தது. இதுவே சென்ற ஆண்டின் ஆண்டுப் பொதுக் கூட்டம் முடிவடைந்த பிறகு பங்குகளின் விலை 3.6 சதவீதம் வரை உயர்ந்து இருந்தது.
அதே நேரம் நேற்று சரிந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் இன்று 11.50 புள்ளிகள் என 1.19 சதவீதம் உயர்ந்து 976.50 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
எனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிலை என்ன, முதலீட்டாளர்கள் ஏன் ஏமாற்றம் அடைந்தார்கள், ஆனால் ஏன் பங்குகள் பெரிய அளவில் சரியவில்லை என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
முதலீட்டாளர்கள்
ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் அறிவிப்பின் போது ஜியோ ஜிகா பைபர் சேவை மூலம் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கவர் போகிறோம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது பிற நிறுவனங்களின் பைபர் சேவை கீழ் 18 மில்லியன் வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ள நிலையில் இது எப்படி ஜியோ மட்டும் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைச் சேர்க்கும் என்று முதலீட்டாளர்களுக்குச் சந்தேகம் வந்துள்ளது.
ரிலையன்ஸ் தரப்பு
ரிலையன்ஸ் ஜியோ சேவை துவங்கிய போது இந்தியாவில் 153 மில்லியன் நபர்கள் மட்டுமே மொபைல் போனில் இணையதளச் சேவைகளைப் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ஜியோவில் மட்டும் 215 மில்லியன் நபர்கள் இணையதளச் சேவைகளைப் பயன்படுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இதே போன்று ஒரு நிலை ஜிகா பைபர் சேவை மூலமாகவும் சாத்தியம் என்று கூறுகின்றனர்.
ரிலையன்ஸ் ஜியோ மதிப்புக் குறித்த சர்ச்சை
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் தனியாகப் பங்குச் சந்தையில் வெளியிடப்படும் என்று கூறப்படும் நிலையில் அதன் தற்போதைய மதிப்பு 50 மில்லியன் டாலர் என்று கூட்டி கூறப்படுகிறது.
ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் ஏர்டெல் நிறுவனத்தின் மதிப்பு 22 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. இது முதலீட்டாளர்களை ஏமாற்றும் சூழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
ஜியோ
ஜியோவின் மதிப்புத் தற்போது பெரிதாக இல்லை என்றாலும் அதனை ஜியோ மொபைல் சேவை, ஜியோ ஜிகா பைபர் திட்டங்கள் போன்றவற்றின் கீழ் சீனாவின் டென்சண்ட் நிறுவனம் போன்று பேச்சு, கடை, வங்கி, வாசிக்க, எழுத, சாப்பிடு, டிஜிட்டல் உள்ளடக்கத்தைக் காணவும், விடுமுறை தினத்தைப் பதிவு செய்வது போன்ற சேவை வழங்கப்பட உள்ளது. டென்சண்ட் டெலிகாம் சேவை வழங்கவில்லை, ஆனால் ஜியோ வழங்குகின்றது போன்ற காரணங்களால் பங்கு சந்தையில் வெளியிடும் முன்பு 50 பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனமாக ஜியோ வளர வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.
மீண்டும் விலை போர்
ஜியோ ஜிகா பைபர் சேவை துவங்கப்படும் போது டிடிஎச், பிராட்பேண்ட் நிறுவனங்கள் இடையில் மீண்டும் விலை போர் வர வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
இலவச சேவை
ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சேவை எப்படி இலவசமாக 6 மாதங்களுக்கு வழங்கப்பட்டதோ அதே போன்று ஜிகா பைபர் சேவைக்கும் சலுகைகள் வழங்கப்பட்டால் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் வேகமாக அதிகரித்து ஒரு வருடத்தில் பல மடங்கு மதிப்பினை உயர்த்த வாய்ப்புகள் உள்ளது.
பங்குச் சந்தை
இதனால் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2018-ம் ஆண்டுப் பொதுக் கூட்டம் நடைபெற்ற அன்று 2 சதவீதம் என 15,800 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த பிறகும் வெள்ளிக்கிழமை 11.50 புள்ளிகள் என 1.19 சதவீதம் வரை பங்குகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.