எதிர்க்கட்சிகள் ஒற்றை ஜிஎஸ்டி வரி விகிதத்தினைக் கொண்டு வர வேண்டும் என்று கூறி வரும் நிலையில் அது அபத்தமான பரிந்துரை என மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 4 அளவுகளில் ஜிஎஸ்டி வரியினை வசூலித்து வரும் நிலையில் 2019-ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்றால் அதனை ஒற்றை வரியாகக் குறைப்போம் என்று காங்கிரஸ் கூறி வருகிறது.
அபத்தமானது
ஒற்றை ஜிஎஸ்டி பரிந்துரை அபத்தமானது. அது ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பாதிக்கும். சர்க்கரை, உப்பு, ஆடைகள் போன்றவற்றுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி என்றால் அத்தியாவசிய பொருட்கள் விலை பல மடங்கு உயரும் என்றும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
காங்கிரஸ்
காங்கிரஸ் அரசு ஜிஎஸ்டி வரி முறையினை அமலுக்குக் கொண்டு வரும் போது ஒற்றை வரியாக 18 சதவீதம் ஆக இருக்கும் என்றும், ஏழைகளுக்குச் சலுகைகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
காங்கிரஸ் கொண்டு வர இருந்த வரி விகிதம் ஏற்றக்கொள்ளத் தக்காதாக இல்லை. அவர்களது ஜிஎஸ்டி வடிவமைப்புச் சரியானதாக இருந்திருக்காது என்றும் பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றை ஜிஎஸ்டி வந்தால் என்ன ஆகும்?
ஒற்றை ஜிஎஸ்டி வரி வந்தால் பிஎம்டபள்யூ, பென்ஸ், விமானம் போன்றவற்றின் விலை குறையும். இப்படிச் செய்தால் அது மோசமான ஆட்சியாக மாறிவிடும். ஜிஎஸ்டி அமலுக்கு வந்த ஒரு வருடத்தில் 1,200 பொருட்களில் 328-ன் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
எல்லோரும் முறையாக வரி செலுத்தினால் ஜிஎஸ்டி மீதான வரி விகிதத்தினைக் குறைப்பதில் சிக்கல் இல்லை. இந்திய மக்கள் குறைந்த வரியை கட்ட வேண்டும் என்பது தான் தன்னுடைய விருப்பமும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பியூஷ் கோயல்
அருண் ஜேட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் ஓய்வில் உள்ளார். எனவே இடைக்கால நிதி அமைச்சர் பொறுப்பினை பியூஷ் கோயல் பெற்றுள்ளார்.