இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் டெக் மகேந்திரா போன்ற நிறுவனங்களின் தலைவர்கள் கோடி கணக்கில் சம்பளம் வாங்குவது என்பது மட்டுமில்லாமல் கோடி மதிப்பிலான நிறுவனப் பங்குகளையும் ஊக்கத் தொகையாகப் பெறுகின்றனர்.
சில நேரம் இது போன்று நிறுவனங்களின் பங்குகள் பிற ஊழியர்களுக்கும் கிடைக்கும் நிலையில் இந்தியாவின் டாப் ஐடி நிறுவன தலைவர்கள் வாங்கும் சம்பளம் மற்றும் பங்குகளின் மதிப்பு எவ்வளவு என்று இங்குப் பார்க்கலாம்.
சி பி குர்நானி
டெக் மகேந்திரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சி பி குருநானி 2017-2018 நிதி ஆண்டில் 142.30 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் மட்டும் இல்லாமல் சம்பளம் மற்றும் 3.98 கோடி ரூபாயினைப் போனஸாகவும் பெற்றுள்ளார்.
சென்ற நிதி ஆண்டில் மட்டும் குருநானிக்கு டெக் மகேந்திராவின் 30 லட்சம் பங்குகள் ஊக்க தொகையாக அளிக்கப்பட்டது. அதன் இன்றைய மதிப்பு 195 கோடி ரூபாய் ஆகும். டெக் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர்களில் 80.58 லட்சம் பங்குகள் என அதிகமாகப் பங்குகளை வைத்து இருப்பதும் இவர் தான். செவ்வாய்க்கிழமை வரையிலான கணக்கின் படி இவரிடம் உள்ள பங்குகளின் மதிப்பு 523 கோடி ரூபாய் ஆகும். ஐடி தலைமை நிர்வாக அதிகாரிகளில் அதிகப் பங்குகளை வைத்துள்ளவர் என்பதிலும் குருநானி முதல் இடத்தினைப் பிடித்துள்ளார்.
அபிதாலி ஜி நீமுச்வாலா
விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அபிதாலி ஜி நீமுச்வாலா 2017-2018 நிதி ஆண்டில் 10.20 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஊக்க தொகையாகப் பெற்றுள்ளார். அது மட்டும் இல்லாமல் சம்பளம் மற்றும் 8.03 கோடி ரூபாய் போனஸூம் பெற்றுள்ளார்.
சலில் பரேக்
2018 ஜனவரி 2 முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள சலில் பரேக் 2017-2018 நிதி ஆண்டில் 3.98 கோடி ரூபாயினைச் சம்பளமாகப் பெற்றுள்ளார். மேலும் 2018-ம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் இவருக்கு அளிக்கப்பட்ட பங்குகளின் இன்றைய மதிப்பு 14.70 கோடி ரூபாய் ஆகும்.
ராஜேஷ் கோபிநாதன்
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் 2017-2018 நிதி ஆண்டில் 12.49 கோடி ரூபாயினைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
எச்சிஎல்
இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான எச்சிஎல் டெக்னாலஜிஸ் 2017-2018 நிதி ஆண்டுக்கான அறிக்கையினை வெளியிடாததால் விவரங்களைத் தெரியவில்லை.