சென்னை: தமிழ் நாட்டில் 10,000 கோடி ரூபாய் செலவில் சேலம் - சென்னை இடையிலான 8வழி பசுமை சாலை அமைப்பதன் மூலம் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.
சேலம் சென்னை சாலை திட்டத்தை போலவே தமிழ்நாட்டில் இன்னும் 8 திட்டங்கள் வர இருப்பதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
8 திட்டங்கள்
சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை போன்றே பிற 8 திட்டங்களிலும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இத்திட்டங்களால் தமிழ்நாட்டின் போக்குவரத்து மேம்படும் என்றாலும், விவசாய உற்பத்தி பாதிக்கப்பட உள்ளது மிக தெளிவாக தெரிகிறது.
பாரத்மாலா திட்டம்
இந்தத் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டம் கீழ் வர இருப்பதாகவும் 570 கிலோ மீட்டர் தொலைவிற்குச் சாலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஈபிஎஸ்
தமிழகம் முழுவதும் இந்தச் சாலைகளை அமைக்கப் பிப்ரவரி மாதமே 43,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் குறித்துத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நித்தின் கட்காரி உட்பட மேலும் சில மத்திய அமைச்சர்களைப் பிப்ரவரி 23ம் தேதி சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை உட்பட இந்த 9 திட்டங்களுக்கும் இந்தச் சந்திப்புகளின் போதே அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
திட்டம் 1
திட்டம் ஒன்று அனைவருக்கும் தெரிந்தது தான். சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை. விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திட்டம் 2
கரூர் - கோயம்புத்தூர் இடையிலான நெடுஞ்சாலை திட்டம்.
திட்டம் 3
1,919 கோடி ரூபாய் செலவில் மேலூர் - திருப்பத்தூர் - புதுக்கோட்டை - தஞ்சாவூர் இடையிலான 4 வழி சாலை திட்டம்.
திட்டம் 4
கும்பகோணம் -சீர்காழி இடையிலான சாலை திட்டம்.
திட்டம் 5
மகாபலிபுரம் - புதுச்சேரி சாலை திட்டம்.
திட்டம் 6
ஒட்டன்சத்திரம் - கமலாபுரம் (திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் - பொள்ளாச்சி நீட்சி) சாலை
திட்டம் 7
மதுரை - தனுஷ்கோடி - ராம்நாட் 4 வழிச்சாலை திட்டம் மற்றும் பாம்பனில் கூடுதல் பாலம். சர்வே பணிகள் துவங்கிவிட்டன.
திட்டம் 8
சென்னை - சித்தூர் பசுமை வழி சாலை திட்டம். சர்வே பணிகள் துவங்கிவிட்டன.
திட்டம் 9
ஓசூர் ரிங் ரோடு சாலை திட்டம்.
பியூஷ் மானுஷ்
சமுக ஆர்வலரான பியூஷ் மானுஷ் தமிழக மக்கள் இந்தச் சாலை திட்டங்களினால் அரசுக்கு எதிரான மன நிலையில் உள்ளனர். மிக மோசமாகப் பொது மக்களின் இடங்களை அரசு வலத்துப்போட்டு வருகிறது. கண்டிப்பாக இந்த நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் ஈபிஎஸ் ஆட்சிக்கு எதிராகத் திரும்பும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த விலை
தமிழ் நாட்டில் வர இருக்கும் இந்தச் சாலை திட்டங்களுக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்த குறைந்த விலையில் தான் பணத்தினை அளிக்கின்றனர். ஏற்கனவே உள்ள சாலைகளுக்காகக் கையகப்படுத்திய நிலங்களுக்கே உரிய பணத்தினை அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டும் உள்ளது.