அமெரிக்கா சீனா மீது அறிவித்த அதீத வரி விதிப்புகள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் உலக நாடுகளில் பல்வேறு விதமானப் பிரச்சனைகள் உருவாகி வருகிறது. இதில் குறிப்பாக இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவில் இருப்பது மிகமுக்கியமாகப் பார்க்கப்பட வேண்டியது.
ஆனால் இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை, இன்னும் சில நாட்களில் வளரும் நாடுகளில் மிகப்பெரிய நிதி நெருக்கடி, பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும் என மார்க் மொபியஸ் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, சீனாவைக் குறிவைத்து பல அடுக்குகளில் பல்வேறு விதமான வரியை விதித்து இரு நாடுகளுக்கு மத்தியிலான வர்த்தகப் போரை துவக்கி வைத்துள்ள காரணத்தால் தற்போது வர்த்தக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல பிரச்சனைகள் சந்தித்து வருகிறது.
10 சதவீத வீழ்ச்சி
தற்போது சந்தையில் இருக்கும் பாதிப்புகளை விடவும் அதிகமானப் பாதிப்புகள் வர உள்ளதாகச் சர்வதேச முதலீட்டாளரான மார்க் மொபியஸ் கூறுவது மட்டும் அல்லாமல் வளரும் நாடுகளில் பங்குச்சந்தையில் 10 சதவீதம் வரையிலான சரிவும், அதிகளவிலான நிதி நெருக்கடியும் உருவாகும் எனக் கூறியுள்ளார்.
நாணய மதிப்பு
தற்போது வளரும் நாடுகளில் நாணய மதிப்பு மோசம் அடைந்து வரும் காரணத்தால், அடுத்தச் சில வாரத்திலோ அல்லது மாதத்திலோ அதிர்ச்சி அளிக்கும் வகையில் நிதி நெருக்கடி உருவாகும் என நிச்சயம், இதில் சந்தேகமே இல்லை.
பாதிப்பு
இந்த மோசமான நாணய மதிப்பு மூலம் பல நிறுவனங்கள் பாதிப்படையும், மேலும் ஏற்றுமதி, இறக்குமதி துறையில் இருக்கும் நிறுவனங்கள் வர்த்தகத்தை இழுத்து மூடும் நிலை கூட உருவாகும் எனத் தெரிகிறது.
மத்திய வங்கிகள்
நாணய கொள்கையை நிலைப்படுத்துவதற்காக அமெரிக்காவின் பெடரல் வங்கியும், ஐரோப்பிய சென்ரல் பேங்க்-ம் பணப் புழக்கத்தை அதிகளவில் கட்டுப்படுத்தியுள்ளது.
இதோடு டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள உயர்வு மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள வர்த்தகத் தொய்வும் வளரும் நாடுகளுக்குக் கூடுதலான பாதிப்பை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க மக்களுக்குப் பாதிப்பு இல்லை..
வரி விதிப்புகளை அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளும் விதித்திருந்தாலும், அமெரிக்காவில் உருவாகும் பணவீக்க பிரச்சனையை அமெரிக்க அரசு சம்பள உயர்வு மூலம் ஈடு செய்கிறது. காரணம் தற்போது அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் மிகக் குறைவாக உள்ளது.
இதனால் வர்த்தக வாயிலாக மட்டுமே அமெரிக்காவிற்குப் பாதிப்பு ஏற்படும், முதலீட்டுச் சந்தையில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என மறைமுகமாக மொபியஸ் கூறுகிறார்.
வளரும் நாடுகள்
இந்தப் பாதிப்புகளால் வளரும் நாடுகளில் 2018ஆம் ஆண்டு முடிவிற்குள் 10 சதவீதம் வரையில் பங்குச்சந்தை பாதிப்படையும் என்றும், 2019 ஜனவரிக்குப் பின்பு 16 சதவீதம் வரையில் சரிய அதிகளவிலான பாதிப்பு ஏற்படும் எனவும் மார்க் மொபியஸ் தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதம்
இந்த மாற்றத்தால் வளரும் நாடுகளில் பணவீக்கம் அதிகமாகி, முதலீடுகள் பெரிய அளவில் குறையும். இதன் எதிரொலியாக நாணய மதிப்பு பாதிப்படையும்.
நாணய மதிப்பில் ஏற்பட உள்ள வீழ்ச்சியைச் சமாளிக்க டர்கி முதல் அர்ஜென்டினா வரையிலான அனைத்து மத்திய வங்கிகளும் வட்டியை உயர்த்தும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.
நாடுகளும் பாதிப்படையும் துறையும்
இந்நிலையில் இந்தப் பிரச்சனைகளால் எந்தெந்த நாடுகள், எந்தத் துறையில் பாதிப்படையும் என்று மார்க் மொபியஸ் கூறியுளார்.
இந்தியா - உற்பத்தி
தென் கொரியா - தொழில்நுட்பம்
பிரேசில் - விவசாய உற்பத்தி
அர்ஜென்டீனா - சோயா பீன்ஸ்
வியட்நாம் - காலணி
பங்களாதேஷ் - ஆடை உற்பத்தி